டிரம்பின் அந்த ஒரு அறிவிப்பு.. மொத்தமாக கவிழ்ந்த இந்திய நிறுவனங்கள்.. பின்னணியில் சர்வதேச அரசியல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு டிரம்ப் வரியை அறிவித்த உடனேயே இந்திய ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் கடுமையாகச் சரிந்தது. இந்தியாவில் இருந்து பெரியளவில் அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என்ற போதிலும் ஏன் பங்குகள் சரிகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அதன்படி நேற்றைய தினம் திடீரென அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்தார். இது சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்திய ஆட்டோ நிறுவனங்களும் இதன் தாக்கத்திலிருந்து தப்பவில்லை.

25% இறக்குமதி வரி
உலகில் அதிகளவில் கார்களை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. இதனால் தேவையைப் பூர்த்தி செய்யக் கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவில் கார்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படியிருக்கும்போது திடீரென கார்களுக்கான இறக்குமதி வரியை டிரம்ப் தடாலடியாக உயர்த்தியுள்ளார்.
கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் தான் பெரும்பாலும் அமெரிக்காவுக்கு கார்களை அனுப்புகிறது. இந்திய நிறுவனங்கள் நேரடியாக கார்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதில்லை. ஆனாலும், இன்றைய தினம் இந்திய பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் மிகப் பெரியளவில் சரிந்தன. டாடா மோட்டார்ஸ் பங்குகள் 5.47%, ஐஷர் மோட்டார்ஸ் ஒரு கட்டத்தில் 2%, சோனா BLW 6%க்கு மேல் சரிந்தது.
இந்திய நிறுவனங்கள்
அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக கார்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறைவாக இருந்தாலும் விநியோகச் சங்கிலியில் முக்கிய இடத்தில் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவுக்கு கார் உதிரிப் பாகங்கள் இந்தியாவில் இருந்தே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் $6.79 பில்லியன் மதிப்பிலான கார் உதிரிப் பாகங்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. அதேநேரம் ஆட்டொமொபைல் துறையில் அமெரிக்காவில் இருந்து நமது இறக்குமதி $1.4 பில்லியன் மதிப்பில் மட்டுமே இருக்கிறது.
ஏன் சரிகிறது
சரி விஷயத்திற்கு வருவோம்.! இந்திய ஆட்டோமொபைல் பங்குகள் ஏன் சரிகின்றன.. அமெரிக்காவிற்கு இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் கார்களை அனுப்புவதில்லை என்பதால் நமது ஆட்டோமொபைல் துறை பங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் இங்கு நிலவும் சூழல் மிகவும் சிக்கலானது.
உதாரணமாக டாடா மோட்டார்ஸை எடுத்துக் கொள்ளலாம்.. டாடா நிறுவனம் அமெரிக்காவிற்கு நேரடியாக வாகனங்களை ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால் அதன் பிரிட்டிஷ் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் விற்பனையில் 22%ஐ அமெரிக்காவிலிருந்து பெறுகிறது. இப்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட டாடா கார்கள் அதிக இறக்குமதி வரியைச் செலுத்த வேண்டும். இது டாடாவை பாதிக்கும்.
ராயல் என்ஃபீல்டை தயாரிக்கும் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் அதே பிரச்சினை தான். அவர்களின் ராயல் என்ஃபீல்ட் 650cc பைக்குகளுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்கு வரி உயர்வதால் விற்பனை சரியும் அச்சம் இருக்கிறது.
உதிரிப் பாகங்கள்
அதேபோல உதிரிப் பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களும் நெருக்கடியை சந்திக்கிறது. உதிரிப் பாகங்களை ஏற்றுமதி செய்யும் சோனா BLW நிறுவனம் அதன் வருவாயில் சுமார் 66%ஐ அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தான் பெறுகிறது. வரி உயர்வை சமாளிக்க கார் நிறுவனங்கள் உதிரிப் பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு விலையைக் குறைத்துக் கேட்கலாம். இதனால் இவர்களின் லாபம் குறையும்
யாருக்கு நல்ல செய்தி
அதேநேரம் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு இது நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஃபோர்டுக்கு முக்கிய உதிரிப் பாக சப்ளையரான சம்வர்தனா மதர்சன் நிறுவனத்திற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஆலைகள் உள்ளன. இதனால் அவர்களுக்கு இது நல்ல செய்தியாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications