ஒர்க் பெர்மிட் டூ H-1B விசா வரை.. கழுத்தை நெரிக்கும் டிரம்ப்.. எல்லா பக்கமும் இந்தியர்களுக்கு ஆபத்து
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற் பிறகு குடியேற்றம் தொடர்பாகப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2 மாதங்களில் மட்டும் டிரம்ப் நிர்வாகம் மூன்று முக்கிய குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது. இதனால் இந்தியர்களே மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக 2வது முறையாகப் பதவியேற்றது முதலே டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குறிப்பாகக் குடியுரிமை சார்ந்து அவர் பல சர்ச்சை உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அமெரிக்கத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக அவர் சொல்லி வருகிறார். இருப்பினும், இதுவரை அமெரிக்கர்களுக்கு இதனால் பெரியளவில் பலன் கிடைத்தது போலத் தெரியவில்லை.

அதேநேரம் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் கடந்த இரு மாதங்களில் எடுத்த பிறப்பித்த இந்த மூன்று முக்கிய உத்தரவுகள் என்ன.. இது இந்தியர்களை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஒர்க் பெர்மிட்
இதில் சமீபத்திய உத்தரவு என்றால் அது ஒர்க் பெர்மிட் தானாக நீட்டிக்கப்படுவதை நிறுத்தி வைப்பதாகும். EADs எனப்படும் ஒர்க் பெர்மிட்டை தானாக நீட்டிக்கும் முறையை டிரம்ப் நிர்வாகம் எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தி வைத்தது. இது குறித்த அறிவிப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டது. அக்டோபர் 30ம் தேதிக்குப் பிறகு இதுபோல ஒர்க் பெர்மிட் தானாக நீட்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஒவ்வொரு முறையும் ஒர்க் பெர்மிட் நீட்டிக்கும் போது, ஒருவர் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்பதால் வேலை இழப்பு கூட ஏற்படலாம்.. ஹெச்-1பி விசா வைத்திருப்போரின் கணவன்/ மனைவி, எஃப்-1 விசா வைத்துள்ள வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவில் புகலிடம் கோரியவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஹெச்-1பி விசா கட்டணம்
அதேபோல கடந்த செப்டம்பர் மாதம் ஹெச்-1 விசா கட்டணத்தைத் தடாலடியாக உயர்த்தினார். முன்பு ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம் 2000 முதல் 5000 டாலர் வரை மட்டுமே இருந்தது. ஆனால், இதை டிரம்ப் ஒரு லட்சம் டாலராக (சுமார் ₹88 லட்சம்) உயர்த்தினார். ஹெச்-1பி விசாக்களை இந்தியர்களே அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாகக் கடந்த 2024ல் H-1B விசா பெற்றவர்களில் 70% இந்தியர்களாக இருக்கும் சூழலில் இதுவும் இந்தியர்களையே அதிகம் பாதிக்கும்.
கிரீன் கார்டு
இது மட்டுமில்லாமல் கிரீன் கார்டு பெறும் முறைகளையும் கடுமையாக்கும் வகையில் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். கடந்தாண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதே குடியேற்றத்தைத் தடுக்க கிரீன் கார்டு விதிகள் கடுமையாக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி சமீபத்தில் கிரீன் கார்டு பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. புதிய மற்றும் மிகவும் கடினமான குடிமக்கள் தேர்வு அக்டோபர் 20 முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பு குடியுரிமை தேர்வுகளில் 100 கேள்விகள் கொண்ட தொகுப்பில் இருந்து 10 கேள்விகள் கேட்கப்படும். அதில் 6 கேள்விகளுக்குப் பதிலளித்தால் போதும்.
இந்தியர்களுக்குப் பாதிப்பு
ஆனால், புதிய முறையில் 128 கேள்வி தொகுப்பில் இருந்து 20 கேள்விகள் கேட்கப்படும் என மாற்றப்பட்டது. மேலும், அதில் 12 கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிக்க வேண்டும் என விதிகள் கடுமையாக்கப்பட்டன. ஒருவர் இரண்டு முறை மட்டுமே இத்தேர்வில் பங்கேற்க முடியும்.. இரண்டாவது முயற்சியிலும் தோல்வியடைந்தால் குடியுரிமை மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 49,700 இந்தியர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்த நிலையில், இதிலும் இந்தியர்கள் கணிசமாகப் பாதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications