ஹெச்-1பி விசா வைத்துள்ள இந்தியர்களுக்கு.. அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் என்ன குடியுரிமை கிடைக்கும்?
வாஷிங்டன்: பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்து டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு இடைக்காலத் தடையை இப்போது நீதிமன்றம் விதித்துள்ள போதிலும், இதில் தெளிவில்லாத சூழலே நிலவி வருகிறது. ஒருவேளை டிரம்பின் நிர்வாக உத்தரவு அமலுக்கு வந்துவிட்டால், அமெரிக்காவில் ஹெச் 1பி உள்ளிட்ட விசா மூலம் சென்ற இந்தியர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது எந்த குடியுரிமையைக் கிடைக்கும் என்பதில் பெரிய குழப்பம் நிலவுகிறது. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
டிரம்ப் அதிபர் தேர்தல் சமயத்திலேயே பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யப் போவதாகக் கூறி வந்தார். அவர் சொன்னது போலவே அதிபர் தேர்தலில் வென்றவுடன் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

இது அமெரிக்காவில் உள்ள மற்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்திவிட்டது. டிரம்பின் இந்த உத்தரவால் அங்கு என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்.. அதற்கான விடை என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்பின் உத்தரவும் தடையும்:
அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்கும் வகையில் உத்தரவிட்டார். அதன்படி வரும் பிப்ரவரி 20ம் தேதிக்குப் பிறகு அமெரிக்காவில் பிறக்கும் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு இயற்கையாகக் குடியுரிமை கிடைக்காது. இருப்பினும், எதிர்க்கட்சி ஆளும் மாகாணங்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்திற்குப் போன நிலையில், டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
விதிகள் சொல்வது என்ன:
ஆனால், டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்தால் அது குழப்பத்தையே ஏற்படுத்தும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் தற்போது அமெரிக்காவில் உள்ள சட்டப்படி அமெரிக்க மண்ணில் எதாவது ஒரு குழந்தை பிறந்தால் அவர்களுக்குத் தானாக அமெரிக்கக் குடியுரிமை கிடைத்துவிடும். அதாவது அந்த குழந்தையின் பெற்றோர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர் சட்டவிரோதமாக நுழைந்து, அவர்களுக்குக் குழந்தை பிறந்தாலும், குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைத்துவிடும்.
குழப்பிய டிரம்ப்:
இதுவே அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டம். இதன் காரணமாகவே சட்டவிரோதமாக நுழைவோருக்கு எப்படி குடியுரிமை அளிக்கலாம் என டிரம்ப் தடை விதிக்கப் போவதாகக் கூறி வந்தார். ஆனால், இதில் ட்விஸ்ட் என்னவென்றால் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் மட்டுமின்றி ஹெச் 1பி விசா, ஹெச் 4எஸ் விசா, மாணவர் விசா என தற்காலிக விசா பெற்று சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை கிடைக்காது என டிரம்பின் உத்தரவில் இருக்கிறது.
ஹெச் 1பி விசா உள்ளிட்ட விசாக்களில் இந்தியர்கள் தான் அதிகபட்சமாக அமெரிக்காவில் இருக்கும் நிலையில், இது அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான். இதன் காரணமாகவே அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் டிரம்பின் உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பே சிசேரியன் செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம்.
எந்த குடியுரிமை கிடைக்கும்:
இப்போது சிக்கல் என்னவென்றால்.. டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ஹெச் 1 பி விசா உள்ளிட்ட விசா பெற்று அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்குக் குழந்தை பிறந்தால்.. அக்குழந்தைக்கு எந்த குடியுரிமை கிடைக்கும்! இதுவே அமெரிக்காவில் உள்ள பல இந்தியர்களின் கேள்வியாக இருக்கிறது.
இது தொடர்பாகப் புலம்பெயர்ந்தோருக்கான ஆலோசகர் சுல்தான் அகமது கூறுகையில், "இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டால் இங்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாக அமெரிக்கக் குடியுரிமை கிடைக்காது. அவர்கள் முறையாக விண்ணப்பித்தே அதைப் பெற முடியும். அப்போது அந்த குழந்தைகளுக்கு எந்த குடியுரிமை கிடைக்கும் என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்:
இந்தியாவைப் பொறுத்தவரைக் குழந்தையின் குடியுரிமை என்பது பெற்றோர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். பெற்றோர் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருந்தால், குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்கும். அதாவது குழந்தை அமெரிக்காவில் பிறந்தாலும் இந்திய குடியுரிமை கிடைக்கும். அதேநேரம் இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைப் பெறக் குழந்தையைத் தூதரகம் மூலம் பதிவு செய்ய வேண்டி இருக்கும்" என்றார்.
டிரம்பின் இந்த உத்தரவுக்கு அமலுக்கு வருவதற்கு முன்பு குழந்தை பிறந்தால்.. அதற்குத் தானாக அமெரிக்கக் குடியுரிமை கிடைத்துவிடும். இந்தியச் சட்டத்தின்படி வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்கும் ஒருவரால் இந்தியக் குடியுரிமை பெற முடியாது. எனவே, அதுபோன்ற சூழல்களில் குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது.
இது தொடர்பான டிரம்பின் உத்தரவுக்குத் தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒருவேளை நீதிமன்றம் டிரம்பின் முடிவு தவறு என நிரந்தரமாகத் தடை விதித்தாலும் அரசியலமைப்பு திருத்தம் மூலம் டிரம்பால் இதைக் கொண்டு வர முடியும். ஆனால், அரசியலமைப்புத் திருத்தத்திற்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. மேலும், மாகாண சட்டசபைகளிலும் நான்கில் மூன்று பங்கு மாகாணங்கள் அதை ஏற்க வேண்டும்.
எளிய விளக்கம்
ஆனால், தற்போதைய சூழலில் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால்.. ஹெச் 1பி உள்ளிட்ட விசா மூலம் சென்றவர்களுக்குக் குழந்தை பிறக்கும் போது டிரம்ப் உத்தரவு அமலில் இருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்கும். டிரம்ப் உத்தரவு அமலில் இல்லை என்றால் தற்போதுள்ள ரூல்ஸின்படி அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications