ஆரம்பே அதிரடி! ட்விட்டரில் இருந்து டாப் நிர்வாகிகள் நீக்கம்.. எலான் மஸ்க் மெகா பிளான் தான் என்ன
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் செல்லும் நிலையில், ஏற்கனவே அங்குப் பல அதிரடி மாற்றங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தன்வசம் இருந்த ட்விட்டர் பங்குகளை அவர் உயர்த்தினார்.
பின்னர், திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கத் தாயாராக உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார் எலான் மஸ்க்.
கைவிட்டுடாதீங்க... எங்களுக்கு உதவுங்க... எலான் மஸ்க்கிடம் உக்ரைன் கமாண்டர் உருக்கம்
எலான் மஸ்க்
முதலில் எலான் மஸ்கின் இந்த முயற்சியைத் தடுக்கவே ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் முயன்றனர். இருப்பினும், ஒரு கட்டத்தில் அவர்கள் எலான் மஸ்க் டீலுக்கு ஒப்புக் கொண்டனர். ஒரு பங்கு 54 டாலர் என்ற வீதத்தில் ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இதன் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்த ட்விட்டர் தனிநபர் நிறுவனமாக மாறுகிறது.
ட்விட்டர்
இன்னும் ஓரிரு வாரத்தில் ட்விட்டர் நிறுவனம் ஒட்டுமொத்தமாக எலான் மஸ்க் கைகளுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கட்டுப்பாட்டில் வந்தவுடன் ட்விட்டர் தளத்திலும் சரி, நிறுவனத்திலும் சரி பல அதிரடி மாற்றங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புதிய ஊழியர்களை எடுக்கும் பணிகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே நிறுத்தி உள்ளது. இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரண்டு மூத்த நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இரு நிர்வாகிகள் நீக்கம்
ட்விட்டரில் ஆராய்ச்சி, வடிவமைப்பு பிரிவுக்குத் தலைமை தாங்கும் மேனேஜர் கேவோன் பெய்க்பூர், தயாரிப்புகளின் தலைவர் புரூஸ் பால்க் ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தான் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ட்விட்டரை விட்டு இப்படி வெளியேற்றப்படுவோம் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை என்றும் கேவோன் பெய்க்பூர் தெரிவித்தார்.
நினைத்துக் கூட பார்க்கவில்லை
கேவோன் பெய்க்பூர் மேலும் கூறுகையில், "அணியை புதிய வழியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் என்னை ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், இப்படியொரு சூழலில் நான் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை" என்று அவர் தெரிவித்தார். எலான் மஸ்க் டீல் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மிக முக்கிய பணியிடங்களைத் தவிர மற்ற மற்ற பணியிடங்களை நிரப்பும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பிளான்
எலான் மஸ்க் கைகளில் ட்விட்டர் நிறுவனம் வந்த பிறகு, அதில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.. ஏற்கனவே, எடிட் வசதி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனி நபர் தவிர நிறுவனங்களை ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
டிரம்ப்
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் தளத்தில் தடை விதிக்கப்பட்ட தடை தொடர்பாகவும் இப்போது எலான் மஸ்க் சில முக்கிய கருத்துகளைக் கூறிருந்தார். ஃபைனான்சியல் டைம்ஸ் ஃபியூச்சர் ஆஃப் தி கார் மாநாட்டில் பேசிய எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார்.
முட்டாள்தனம்
இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், "ட்விட்டரில் இருந்து ட்ரம்ப் தடை செய்யப்பட்டது, அவரது குரலை மௌனமாக்கவில்லை, மாறாக வலதுசாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அவரது கருத்து செல்லும் வேகத்தை அதிகப்படுத்தவே செய்துள்ளது. இந்தத் தார்மீக ரீதியாகத் தவறானது மற்றும் முழுக்க முழுக்க முட்டாள்தனமான முடிவு" என்றார்.