"2 கிமீ உயரம்.." செவ்வாய் கிரகத்தில் சுழன்றடித்த பேய் புயல்.. "அம்மாடி" வாயை பிளக்கும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் 2 கிமீ உயரத்திற்குப் பேய் புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதை அங்கிருந்த நாசா ரோவர் படம் பிடித்துள்ள நிலையில், அதை நாசா இப்போது இணையத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் இருக்காது. பூமியைப் போலவே வேறு ஒரு கிரகத்திலும் நிச்சயம் உயிரினங்கள் இருக்கும் என்பதே ஆய்வாளர்கள் கருத்து. இதன் காரணமாக விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது

குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவின் நாசா அனுப்பிய ரோவர் ஒன்று இப்போது செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.
செவ்வாய் கிரகம்: நாசாவின் ரோவர் இப்போது செவ்வாய்க் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ என்ற பள்ளத்தை ஆய்வு செய்யும் போது dust devil அதாவது பேய் புயல் அரிய வானிலை நிகழ்வை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த பேய் புயல் ஏற்பட்டுள்ளது. இது மணிக்கு சுமார் 19 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதை நாசா துல்லியமாகப் படம் பிடித்துள்ளது.
இது குறித்த வீடியோ ஒன்றை நாசா வெளியிட்டிருந்தது. அதில் செவ்வாய்க் கிரகத்தில் ஏற்பட்ட இந்த பேய் புயலின் கீழ்ப் பகுதி மேற்கு நோக்கி நகர்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அங்குள்ள ரோவர் கேமராக்கள் மூலம் நான்கு வினாடிகள் இடைவெளியில் 21 பிரேம்களால் இந்த வீடியோவை ரோவர் எடுத்துள்ளது. அதை சுமார் 20 மடங்கு வேகப்படுத்தி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
2 கிமீ உயரம்: இந்த பேய் புயல் குறித்த டேட்டாக்களை ரேவர் சேகரித்துள்ளது. அதன்படி இந்த புயல் ரோவர் இருந்த இடத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் தோரோஃபேர் ரிட்ஜ் என்ற இடத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த புயலின் அகலம் சுமார் 60 மீட்டராக இருந்ததாகக் கூறப்படுகிறது. நாசா வெளியிட்ட வீடியோவில் பேய் புயலின் உயரம் சுமார் 118 மீட்டர் மட்டுமே இருப்பது போல இருந்தது. ஆனால், உண்மையில் இந்த புயல் சுமார் 2 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்துள்ளது.
Mars dust devil caught in action! This video, which is sped up 20 times, was captured by one of my navigation cameras. 📸 More on what my team is learning: https://t.co/PhaOYOTrFH pic.twitter.com/vRaAVszcm5
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) September 29, 2023
செவ்வாய்க் கிரகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பேய் புயல் குறித்து ஆய்வாளர்கள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளனர். அதேநேரம் இது ஏதோ செவ்வாய் கிரகத்தில் மட்டும் ஏற்படும் நிகழ்வு இல்லை. பூமியிலும் கூட இதுபோன்ற பேய் புயல்கள் ஏற்படவே செய்யும். குளிர்ந்த காற்று கீழே இறங்கும் சமயத்தில் சூடான காற்று மேலே எழும் போது இந்த பேய் புயல் உருவாகின்றன. ஆனால் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் இந்த புயல்கள் பூமியில் ஏற்படுவதைக் காட்டிலும் பெரியதாக இருக்கும்.
எப்போது ஏற்படும்: அமெரிக்கா அனுப்பிய இந்த ரோவர் தற்போது செவ்வாய் கிரகத்தின் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது அங்கு இப்போது கோடைக் காலம் நிலவுகிறது. அங்குக் கோடை மற்றும் வசந்த காலங்களில் இதுபோல பேய் புயல்கள் அதிகம் ஏற்படுமாம்.
செவ்வாய் கிரகத்தில் ஏற்படுவது பெரியதாக இருந்தாலும் கூட அது பலவீனமாக இருக்கும். செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் இந்த புயல்களால் அங்குச் சுற்றி இருக்கும் தூசி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும். அதற்கு மட்டுமே இந்த புயல்கள் பயன்படும். செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் வானிலை சார்ந்த மாற்றங்கள்.. அங்கு நிலப்பரப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த புயல்களை நாசா ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications