இந்தியாவுக்கே எங்கள் ஆதரவு, பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்படுங்கள் - சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட பசிபிக் பிராந்திய பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை எச்சரிக்கும் வகையிலான மசோதா புத்தாண்டு தினத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் 740 பில்லியின் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு கொள்கை மசோதாவைக் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நிறைவேற்றியது. இதிலிருந்து கிடைக்கும் நிதியை வைத்து அமெரிக்க ராணுவம் தனது செலவுகளை மேற்கொள்ளும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும்கூட அந்நாட்டின் அதிபர் டிரம்ப் இந்த மசோதாவைத் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திக் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நிராகரித்தார்.

அதிபர் முடிவை நிராகரித்த எம்பிகள்
இந்நிலையில், அதிபரின் வீட்டோ முடிவை நிராகரிக்கப் புத்தாண்டு தினத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அதிபரின் முடிவை நிராகரிக்க மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், டிரம்பின் குடியரசு கட்சியினரே டிரம்பின் வீட்டோ முடிவை நிராகரித்து வாக்களித்தனர். 100 உறுப்பினர்களைக் கொண்ட மேல் சபையில் 81-13 என்று நிறைவேற்றப்பட்டது.

சீனா குறித்த தீர்மானம்
இந்த மசோதா எல்லைப் பகுதியில் இந்தியா மீதான ராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சீன அரசை வலியுறுத்தும் தீர்மானத்தையும் உள்ளடக்கியது. இது குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி. "இந்த புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு கொள்கை மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் சட்டமாக்கியுள்ளது. இது பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இந்தியா உட்பட மற்ற நாடுகள் மீதான ராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சீன அரசை வலியுறுத்தும் தீர்மானத்தையும் உள்ளடக்கும் எனது தீர்மானத்தையும் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு எங்கள் ஆதரவு இருக்கும்
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் சீன ராணுவம் மேற்கொள்ளும் வன்முறை ஆக்கிரமிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. புத்தாண்டு தினத்தில் நாம் இந்த மசோதாவை நிறைவேற்றுவது இந்தியா உள்ளிட்ட கூட்டணி நாடுகளுக்கு எப்போதும் நமது ஆதரவு இருக்கும் என்ற தெளிவான செய்தியை அனுப்புகிறது" என்றார்.

முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்கா
ராஜா கிருஷ்ணமூர்த்தி முன்மொழிந்த இது பாதுகாப்பு கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா உள்ளிட்ட பசிபிக் நாடுகளுக்கு அமெரிக்கா எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை விளக்கும் வகையில் உள்ளது.

இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்
சீனாவின் தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்பு குறிப்பிடத்தக்கக் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், தற்போதுள்ள ராஜதந்திர வழிமுறைகள் மூலம் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கச் சீனா இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் மற்றும் பூட்டான் பகுதிகளில் பயங்கரவாதிகள் இருப்பதாக எவ்வித ஆதாரமும் இன்றி கூறும் சீனா, இதன் மூலம் அப்பகுதிகளை ஆக்கிரமிக்க முயல்வது சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என்றும் மசோதா கூறுகிறது.












Click it and Unblock the Notifications