அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டம்.. ஒரே நாளில் 2390 பேர் பலி, உயிரிழப்பு 61000 ஆக அதிகரிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,064,193 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61656 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2390 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் பரவி உள்ளது. கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டம் எடுத்து ஆடிவருகிறது. தினமும் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதும், தினமும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

61 ஆயிரம் ஆக உயர்வு
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,064,193 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61656 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2390 பேர் கொரோனாவில் கொடூர தாக்குதலுக்கு உயிரிழந்தனர். உலகம் முழுவதும் சுமார் 2லட்சத்து 28 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.

23,474 பேர் பலி
அமெரிக்காவிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணம் என்றால் நியூயார்க் தான்.. அங்கு இதுவரை 306,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் 23,474 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக நியூ ஜெர்சியில் 116264 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அங்கு 6770 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

கொரோனா பரிசோதனை
மஸ்ஸாசூசெட் மாகாணத்தில் 60265 பேரும், இலியான்ஸில் 50 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 6,1,39,911 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது 10லட்சம் பேருக்கு 18,549 என்ற விகிதத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 10லட்சம் பேரில் 186 பேர் என்ற விகிதத்தில் உயிரிழந்துள்ளனர்.

வணிக நடவடிக்கைகள்
அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. டெக்சாஸ் மாகாணத்தில் வணிக நிறுவனங்கள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. டென்னிசியில் இந்தவார இறுதியில் சில்லறை வணிகம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் 3 கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கலிபோர்னியா, ஒரேகான், ஒக்லஹோமா, ஓகியோ மாகாணங்களில் வணிக நிறுவனங்கள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நியூயார்க்கில் மே 15 வரை அத்தியாவசியமற்ற கடைகள், வணிக தளங்கள், வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,












Click it and Unblock the Notifications