"அதிகார மையம்.." அமெரிக்கா வரலாற்றையே தீர்மானித்த ஹென்ரி கிஸ்ஸிங்கர் காலமானார்! யார் இவர்
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுக் கொள்கையைச் செதுக்கியவராகக் கருதப்படும் ஹென்றி கிஸ்ஸிங்கர் நேற்று புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 100.
அமெரிக்கா முன்னாள் அதிபர்களான நிக்சன், ஜெரால்டு போர்டு ஆகிய இருவரிடமும் ஹென்றி கிஸ்ஸிங்கர் பணியாற்றியவர். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அழியாத முத்திரையைப் பதித்த இவர், அங்கே ஒரு காலத்தில் தவிர்க்கவே முடியாத அதிகார மையமாக இருந்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், தூதரக ஆலோசகர் என்று பல முக்கிய பதவிகளை இவர் வகித்துள்ளார். பனிப்போர் காலகட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பல முக்கிய முடிவுகளை இவர் எடுத்துள்ளார்.
காலமானார்: நோபல் பரிசு வென்ற இந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 100. கனெக்டிகட்டில் உள்ள அவரது வீட்டில் நேற்று புதன்கிழமை உயிரிழந்தார்.
கிஸ்ஸிங்கர் தான் பணியில் இருந்த காலத்தைக் கடந்தும் பல நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டார். ஓய்வு பெற்ற பிறகும் கூட வெள்ளை மாளிகையில் நடந்த பல்வேறு கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார். பல்வேறு புத்தங்களை வெளியிட்டுள்ள அவர், வட கொரியா அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து செனட் குழு முன் சாட்சியமளித்தார். மேலும், கடந்த 2023 ஜூலை மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென சீனா சென்று அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்தார்.
அமெரிக்க அதிபராக நிக்சன் இருந்த போது, ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையில் முக்கிய முடிவுகளை எடுத்தார் அமெரிக்கா சீனா இடையே உறவை ஏற்படுத்துவது, ஆயுத கட்டுப்பாடு குறித்து அமெரிக்கா சோவியத் ஒன்றியம் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வது, இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்துவது மற்றும் வியட்நாமில் அமைதி பேச்சுவார்த்தை என்று அப்போது நடந்த பல சர்வதேச நிகழ்வுகளில் இவரது பங்கு முக்கியமானது.
கிஸ்ஸிங்கர்: நிக்சன் அதிபர் காலம் முடிந்த பிறகு அடுத்து அதிபர் ஃபோர்டு பதவியேற்ற நிலையில், அவரும் கூட கிஸ்ஸிங்கரின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
சர்வதேச அளவில் பார்த்தோம் என்றால் ஒரு தரப்பினர் கிஸ்ஸிங்கரின் புத்திசாலித்தனம் மற்றும் அனுபவத்திற்காக அவரை பாராட்டுவார்கள். அதேநேரம் மற்றவர்கள் லத்தீன் அமெரிக்காவில் சர்வாதிகாரிகளை ஆதரித்ததற்காக அவரை கடுமையாக விமர்சிப்பார்கள். அதன் பிறகு பல நாடுகள் அவருக்குத் தடையும் விதித்தன. மேலும், அப்போது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் பலரும் கேள்வி எழுப்பினர்.
அமைதிக்கான நோபல் பரிசு: கடந்த 1973ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும் நோபல் வரலாற்றில் அது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை எதிர்த்து நோபல் கமிட்டியின் இரு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். கம்போடியா மீது அமெரிக்கா நடத்திய ரகசிய குண்டுவீச்சு குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். அப்படி இருக்கும் போது இவருக்கு நோபல் பரிசை வழங்கக் கூடாது என்பதே அவர்கள் வாதமாக இருந்தது.
அவர் ஓய்வு பெற்ற பிறகும் கூட தொடர்ச்சியாக ஆக்டிவாக பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து விசாரணை கமிட்டி அமைக்கப்பட்ட போது, அதைத் தாங்க அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த கிஸ்ஸிங்கரை தான் நியமித்தார். இருப்பினும், அப்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் அவர் பதவி விலகினார்.












Click it and Unblock the Notifications