விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்.. இந்தியாவுக்கு தான் பெரிய சிக்கல்! சீனாவுக்கும் கூட பாதிப்பு!
வாஷிங்டன்: டிரம்ப் அரசு வெளிநாட்டு மாணவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவது அனைவருக்கும் தெரியும். அப்படித் தான் இப்போது டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களில் பல புதிய கட்டுப்பாடுகளை முன்மொழிந்துள்ளன. இவை அனைத்தும் நடைமுறைக்கு வந்தால் அது இந்தியர்களுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
டிரம்ப் அரசு அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்குப் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் தான் அதிகச் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். மாணவர்களுக்கு வழங்கப்படும் F-1 விசாவில் தான் பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு கொண்டு வருகிறது.

டிரம்ப் நிர்வாகம்
இதற்கிடையே சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை டிரம்ப் நிர்வாகம் மேலும் கடுமையாக்கியுள்ளது. அதன்படி வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கும் காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ள இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால் சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் அமெரிக்காவில் படிப்பதும் வேலை செய்வதும் கடினமாகிவிடும்.
புதிய F-1 விசா விதிகளின்படி, சர்வதேச மாணவர்கள் ஒரு வருடம் படித்த பின்னரே கல்லூரிகளை மாற்றவோ அல்லது படிப்புகளை மாற்றவோ அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதி அடுத்த மாதம் அல்லது அக்டோபரில் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிதாக அமெரிக்காவில் இணையும் இந்திய மாணவர்களுக்கு இது சிக்கலைத் தரலாம்.
புதிய விதிகள்
F-1 விசாவில் அமெரிக்காவில் படிக்கும் இளங்கலை மாணவர்கள், முதல் வருடத்தில் தங்கள் படிப்புக்களை மாற்ற முடியாது. அதேபோல ஒரு படிப்பை முடிக்கும் சர்வதேச மாணவர்கள் அதே லெவல் அல்லது அதற்கு கீழ் லெவலில் படிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். உதாரணமாக இளங்கலை படிப்பைப் படித்தவர்கள், மீண்டும் இளங்கலைப் பட்டத்தைப் படிக்க அல்லது அதை விடக் குறைவான டிப்ளமோ உள்ளிட்ட படிப்பைப் படிக்க அனுமதி இல்லை. மேலும், முதுகலை மாணவர்கள் தங்கள் படிப்பைப் பாதியில் மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
முக்கிய விதிகள் மாற்றம்
மேலும், தற்போதுள்ள விதிகளின் கீழ் வெளிநாட்டு மாணவர்கள் மாணவராக இருக்கும் வரை, அது எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும், எஃப்1 விசா செல்லுபடியாகும். ஆனால், இப்போது புதிய விதிகளின் கீழ் F-1 மற்றும் J-1 விசா வைத்திருப்பவர்களுக்கு நான்கு வருட காலம் நிர்ணயிக்கப்படும். இந்த காலகட்டத்தைத் தாண்டி அமெரிக்காவில் இருக்க விரும்பும் மாணவர்கள், நேரடியாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு இது குறித்து விண்ணப்பிக்க வேண்டும்.
முன்மொழியப்பட்ட இந்த புதிய விதியின்படி, F வகை விசா வைத்திருப்பவர்கள் தங்கள் படிப்பின் முடிவில் 30 நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். இது முன்பு இருந்த 60 நாட்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். விசா முறைகேடுகளைக் குறைக்கவே இந்த புதிய கடுமையான விதிகளைக் கொண்டு வருவதாக டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கர்களுக்குப் பாதிப்பு
இது குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அமெரிக்காவில் இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் வெளிநாட்டு மாணவர்களையும் பிற விசா ஹோல்டர்களையும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காலவரையின்றித் தங்க அனுமதித்துள்ளன. இது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.. அமெரிக்க மக்களின் வரிகள் இதற்காகச் செலவழிக்கப்பட்டுள்ளன.மேலும் இது அமெரிக்கக் குடிமக்களுக்குப் பாதகமாக அமைந்துள்ளது.
அதையெல்லாம் சரி செய்யவே புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளோம். இந்த புதிய விதிகளின் கீழ் விசாவுக்கு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும். வெளிநாட்டு மாணவர்களைக் கண்காணிக்கும் சுமையை இது குறைக்கும்" என்றார்.
இந்தியாவுக்கே பாதிப்பு
அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். இதனால் இந்த மாற்றத்தால் அமெரிக்காவில் படிக்கும் இந்தியா மற்றும் சீன மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications