2027 வரை H-1b விசா இல்லை.. இந்தியாவுக்கு பேரதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. நிலைமை ரொம்ப மோசம்!
வாஷிங்டன்: டிரம்ப் அரசு இந்தியர்களுக்குத் தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. ஏற்கனவே H-1B விசாவுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது விசா நேர்காணல்களே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 2027 வரை விசா நேர்காணல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
டிரம்ப் வந்த பிறகு அங்குக் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தோர் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் தங்கியிருந்தோரும் கூட பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். அதிலும் ஹெச்-1பி விசா விவகாரத்தில் டிரம்ப் அரசு காட்டிய கெடுபிடிகளால் நேரடியாக இந்தியர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.

H-1B விசாக்கள்
அமெரிக்காவில் வழங்கப்படும் ஹெச்-1பி விசாக்களை அதிகம் இந்தியர்களே பெற்று வருகிறார்கள். இந்தச் சூழலில் ஹெச்-1பி விசா கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களைப் பாதித்தது. மேலும், கடந்தாண்டு டிசம்பரில் சோஷியல் மீடியா ஆய்வுகளையும் அமெரிக்கா தீவிரப்படுத்தியது. அதாவது விசா கோரி விண்ணப்பிப்போரின் சோஷியல் மீடியா கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக டிசம்பரில் ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பித்தோரின் நேர்காணல்கள் பல மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டன. புதிதாக விசா கோரி விண்ணப்பித்தோர் மட்டுமின்றி ஹெச்-1பி விசா நேர்காணல் புதுப்பிப்பிற்கு இந்தியா வந்தோரும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் நேர்காணல்கள் பல மாதங்கள் வரை தள்ளி வைக்கப்பட்டது.
2027 வரை இல்லை
இதற்கிடையே இந்தாண்டு முழுக்க விசா நேர்காணல் நிரம்பி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியர்கள் மேற்கொண்டு விசா கோரி விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விசா நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்ட பலருக்கும் கூட அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பரில் இருந்து முதலில் 2026 மார்ச் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்ட நேர்காணல்கள் இப்போது தற்போது 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் தற்போதைய சூழலில் நிலைமை சீரடைய வாய்ப்பில்லை என்றே தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வலியுறுத்தல்
எனவே, அமெரிக்காவில் உள்ள H-1B விசா பணியாளர்கள் ஸ்டாம்பிங்கிற்காக இந்தியா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கக் குடியேற்ற வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாகக் குடியேற்ற வல்லுநரான எமிலி நியூமன் கூறுகையில், "கடந்த 50 நாட்களில் விசா நேர்காணல் ஓபன் ஆனதாகத் தெரியவில்லை.. எனவே, அமெரிக்காவில் இருக்கும் H-1B நிபுணர்கள் இந்தியாவில் விசா ஸ்டாம்பிங்கிற்கு அப்பாயிண்ட்மென்ட் பெற முயல வேண்டாம்.
விசா வழங்குவதில் அமெரிக்கா குடியேற்ற அதிகாரிகள் முக்கியத்துவம் காட்டுவது போலத் தெரியவில்லை. முடிந்தவரை விசாக்களை மறுக்கவே முயல்கிறார்கள். பைடன் நிர்வாகம் விசாக்கலை முடிந்தவரை வேகமாக கிளியர் செய்தது. ஆனால், இப்போது அதற்கு நேர்மாறான ஒரு சூழலே இருக்கிறது. எனவே, இந்தியாவுக்குச் செல்வதை தவிர்ப்பதே சிறந்தது" என்றார்.
இந்தியர்கள் கலக்கம்
மற்றொரு அமெரிக்கக் குடிவரவு வழக்கறிஞர் இது தொடர்பாகக் கூறுகையில், "2027 வரை வழக்கமான அப்பாயிண்ட்மென்ட்கள் எதுவும் இல்லை. கடந்த மாதம் ஸ்டாம்பிங்கிற்காக வந்தவர்களுக்கு நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டன. ஜனவரி மற்றும் பிப்ரவரி தேதிகள் நேர்காணல் இருந்தோருக்கு ஓராண்டிற்குப் பிறகு தேதியை ஒதுக்கியுள்ளனர்" என்றார்.
இப்படி விசா விண்ணப்பித்தோர், ஸ்டாமிங் செய்ய வந்தோர் என அனைவருமே இக்கட்டான சூழலில் மாட்டியுள்ளனர். நிலைமை இப்படியே தொடரும் என்பதால் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய இந்தியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications