H-1B விசா ஜாக்பாட்.. 75%ஆக எகிறிய சக்ஸஸ் ரேட்! காரணம் ட்ரம்ப் போட்ட ஒரு ரூல்! இந்தியர்களுக்கு லாபமா?
வாஷிங்டன்: "அமெரிக்கா போகணும்... அங்க செட்டில் ஆகணும்" - இது தான் இந்திய ஐடி ஊழியர்களின் பல நாள் கனவு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எச்-1பி (H-1B) விசா கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்து வந்தது. இதற்கிடையே 2026-ம் ஆண்டு எச்-1பி விசா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய 'யூ-டர்ன்' அடித்துள்ளது. டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விசா கிடைக்கும் வாய்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் பலரும் ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் முதன்மையானதாக அமெரிக்கா இருக்கிறது. ஐடி துறையில் அமெரிக்காவில் தேவை அதிகமாக உள்ள நிலையில், அதைப் பூர்த்தி செய்ய இந்தியர்கள் அங்குச் செல்கிறார்கள்.

டிரம்ப்
இருப்பினும், கடந்தாண்டு அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், விசா தொடர்பாக ஏகப்பட்ட விதிகளை விதித்தார். இதனால் அமெரிக்காவுக்குச் செல்வதே கடுமையான ஒன்றாக மாறியது. இதற்கிடையே ஹெச்-1பி விசா தொடர்பாக சில முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஹெச்-1பி விசா கிடைக்கும் விகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.
கடந்த காலங்களில் எச்-1பி லாட்டரியில் மூன்று பேரில் ஒருவருக்குத்தான் (33%) விசா கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு, பல முன்னணி நிறுவனங்களின் 'சக்ஸஸ் ரேட்' 50 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, முதுகலை பட்டதாரிகள் மற்றும் அதிக சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு இந்த வாய்ப்பு 75 சதவீதத்தைத் தொட்டுள்ளது. 'BAL' போன்ற பிரபல குடியேற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் 60% வரை தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
காரணம் என்ன
இந்த 'ஜாக்பாட்' தானாக நடக்கவில்லை.. இதன் பின்னணியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி குடியேற்றக் கொள்கைகள் உள்ளன. முதலில் எச்-1பி மூலம் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்து வர முதலில் விண்ணப்பக் கட்டணமாக 1500 டாலர் மட்டுமே இருந்தது. அதை டிரம்ப் 1,00,000 டாலராக உயர்த்தினார். இந்த அதீத கட்டண உயர்வால், வெளிநாடுகளில் இருந்து ஆட்களை எடுப்பதை மருத்துவமனைகளும் பல்கலைக்கழகங்களும் நிறுத்திவிட்டன. இதனால் 7.5 லட்சமாக இருந்த விண்ணப்பங்கள், இந்த ஆண்டு வெறும் 2 லட்சம் என்ற அளவுக்குச் சரிந்தது. இவை எல்லாம் சேர்த்துத் தான் சக்சஸ் ரேட்டை அதிகரித்து இருக்கிறது.
மாறிய லாட்டரி
முன்பு அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவில் பழைய லாட்டரி முறை இருந்தது. அதாவது அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி அதிகளவில் விசா கோரி விண்ணப்பங்கள் வரும்போது, லாட்டரி முறையில் விசா கொடுப்பார்கள். ஆனால், அந்த பழைய லாட்டரி முறையைத் தூக்கியெறிந்துவிட்டு, 'யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் டிரம்ப் புதிய முறையைக் கொண்டு வந்தார்.
இதன் மூலம் அனுபவம் குறைந்தவர்களை விட, சீனியர் ஊழியர்களுக்கே விசா எளிதாகக் கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல், ஏஐ (AI) முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக ஆட்களை எடுப்பதைத் தவிர்த்து, முக்கியமான பதவிகளுக்கு மட்டும் ஆட்களை அழைத்து வருகிறார்கள். இதன் காரணமாகவே விசா தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தியர்களுக்கு லாபமா?
விசா கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், அதற்குப் பின்னால் இருக்கும் 'காஸ்ட்லி' நிபந்தனைகளைத் தவிர்க்க முடியாது. மேலும், இந்த சக்சஸ் ரேட் அதிகரிப்பு, விண்ணப்பங்கள் குறைவால் இந்தியர்களுக்கு லாபமா இல்லை நஷ்டமா என்பது தொடர்பாக இப்போது வரை எந்தவொரு தகவலும் இல்லை. இருப்பினும், ஒட்டுமொத்த நம்பரே பெரியளவில் குறைந்து இருப்பதால் இந்தியர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கும் என்றே தெரிகிறது. ஆக, இப்போது லாட்டரி ஜெயிக்கிறது ஈஸிதான் என்றாலும் ஆனா அதுக்கான 'என்ட்ரி பீஸ்' தான் எட்டாத உயரத்துல இருக்கு!














Click it and Unblock the Notifications