"உங்க டைம் முடிய போகுது!" ஈரானுக்கு ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை! அடுத்து ஈரானில் நடந்த மர்ம வெடிப்புகள்
தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையேயான பதற்றம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஏற்கனவே ஈரானை அமெரிக்கா கடல் வழியாக முற்றுகையிட்டுள்ள நிலையில், டிரம்ப் இப்போது தனது அடுத்தகட்ட திட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். டைம் ஓடிக் கொண்டே இருப்பதாகவும் ஈரான் ஒரு டீலுக்கு வந்தாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் வெடித்த போர் இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கும் சூழலில், உலக நாடுகளே நிலைமை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

டிரம்ப் எச்சரிக்கை
இந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், "ஈரான் உடன்படிக்கைக்கு வர வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது" என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றிப் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் மர்ம வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஈரான்
தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இன்று காலை தெஹ்ரான் நகரில் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், அவை என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த வெடிப்புகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், தற்போது ஈரானில் எந்தத் தாக்குதலையும் தாங்கள் நடத்தவில்லை என்றும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புகளுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒருவேளை வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
டைம் நெருக்கிவிட்டது
இதற்கிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப் அதிரடியாக சில கருத்துகளைக் கூறினார். அங்குப் பேசிய அவர், "நாங்கள் ஏன் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்? சாதாரண ராணுவத் தாக்குதல்கள் மூலமே ஈரானின் ராணுவத்தை நாங்கள் நிலைகுலையச் செய்துவிட்டோம். அணு ஆயுதங்களைப் பயன்படுத்த யாரையுமே அனுமதிக்கக் கூடாது. ஆனால், ஈரானுக்குச் சொல்லிக்கொள்வது ஒன்று தான்.. டைம் ஓடிக்கொண்டிருக்கிறது.. எங்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய அவர்களுக்கு இன்னும் குறைந்த நேரமே உள்ளது" என்றார்.
ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தனது மூன்றாவது பிரம்மாண்ட விமானம் தாங்கிக் கப்பலான USS George HW Bushஐ மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பியுள்ளது. தற்போது அரபிக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் அமெரிக்காவின் மூன்று பெரும் போர்க்கப்பல்கள் முகாமிட்டுள்ளன. அதேபோல ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு ஈரான் படகையும் கண்டதும் சுட ட்ரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கப்பல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாகிஸ்தான் முன்னின்று நடத்தி வருகிறது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பொதுவான உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை இழுபறியிலேயே உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
ஒரு பக்கம் "அமைதிப் பேச்சுவார்த்தை" என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கம் மூன்றாவது போர்க்கப்பலை அனுப்புவது ட்ரம்ப்பின் ராஜதந்திரமாக இருக்கிறது. இருப்பினும், அது எந்தளவுக்கு வேலை செய்யும்.. ஈரான் இந்த பிரஷருக்கு அடிபணிந்து டீலுக்கு வருமா என்பதே இப்போது பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.














Click it and Unblock the Notifications