"போர் நிறுத்தத்தை நீடிக்க முடியாது.." ஈரானில் இறங்க தயாராக இருக்கும் அமெரிக்கா..டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்: அமெரிக்கா ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீடிக்க முடியாது எனக் கூறியுள்ள டிரம்ப், அமெரிக்க ராணுவம் இறங்கித் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கடற்படை மூலம் ஈரானை முற்றுகையிட்டிருப்பது ஒரு அட்வான்டேஜ்ஜை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன. ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாகத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் பேச்சுவார்த்தை மூலம் ஒரு நல்ல தீர்வை எட்ட முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீடிக்க வாய்ப்பு இல்லை
சுமார் இரண்டு வாரங்களாக அமலில் இருந்த தற்காலிக போர்நிறுத்தம் புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த அமைதி ஒப்பந்தத்தை நீட்டிக்கத் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஈரான் பலமுறை போர்நிறுத்த விதிகளை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் பிடிவாதம்
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா கடற்படை மூலம் முற்றுகையிட்டிருப்பது பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு ஒரு அட்வான்டேஜ்ஜை தந்துள்ளதாக ட்ரம்ப் கூறினார். ஆனால், ஈரான் இதனை ஒரு விரோதப் போக்காகவே பார்க்கிறது. கடல்சார் கட்டுப்பாடுகளை நீக்கினால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியம் எனத் ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்த இழுபறியால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஈரான் மீதான போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஒருவித நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த மோதல் முழு வீச்சிலான போராக மாறினால் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.. இந்த போர் மிகப் பெரிய செலவை ஏற்படுத்தும் என்றும் இதனால் உயிர்ச் சேதங்களும் மோசமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதிகபட்ச அழுத்தம்
ட்ரம்ப்பின் அணுகுமுறை எப்போதும் 'அதிகபட்ச அழுத்தம்' கொடுப்பதாகவே இருந்துள்ளது. ஒருபுறம் போருக்கான மிரட்டலை விடுப்பதன் மூலம், ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்து தனக்குச் சாதகமான ஒப்பந்தத்தைப் பெற அவர் முயல்கிறார். ஆனால், போர்நிறுத்தக் காலக்கெடு முடிந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கினால், அது மத்திய கிழக்கு நாடுகளைத் தாண்டி உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வளைகுடா போர் பின்னணி
கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது முதல் நாளே ஈரான் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார். இருப்பினும், ஈரான் சரணடையத் தயாராக இல்லை. இதனால் போர் தொடர்ந்தது. வளைகுடாவில் போர் தொடரவே நிலைமை மோசமானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உச்சத்தைத் தொட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகே கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் வந்தது.













Click it and Unblock the Notifications