"உடனே வெளியேறுங்கள்.." 30 நாள்தான் டைம்! அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு டிரம்ப் வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார். இதனால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்குப் புதிய விதிகளை அறிவித்துள்ள டிரம்ப், உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவை மீண்டும் முதன்மை நாடாக மாற்றுவேன் என்பதைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர் டிரம்ப். மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி இருப்போரையும் நாடு கடத்துவேன் எனத் தடாலடியாக அறிவித்தவர் டிரம்ப். அவர் ஆட்சியை அமைத்த பிறகு அதற்கேற்ப சட்டவிரோதமாகத் தங்கியிருந்தோருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

டிரம்ப்
அவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமின்றி சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் மீதான நடவடிக்கைகளையும் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இந்தியர்கள் கணிசமாக வசித்து வரும் சூழலில், அவர்களுக்கும் அது பிரச்சினையாக இருக்கிறது.
வெளிநாட்டினருக்கு மெசேஜ்
இதற்கிடையே டிரம்ப் அரசு இப்போது புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அதாவது அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவரும் அரசில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பதிவு செய்யத் தவறுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே டிரம்பின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை "சட்டவிரோதமாக நாட்டில் உள்ள வெளிநாட்டினருக்கான மெசேஜ்" என்ற தலைப்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்
அதில் மேலும், "அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் வசிக்கும் வெளிநாட்டினர் பெடரல் அரசின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அதற்கு இணங்கத் தவறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் . அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு டிரம்ப் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். நீங்கள் உடனடியாக இப்போதே அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிடுங்கள். நீங்களே உங்களை நாடுகடத்திக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தாங்கள் நாட்டில் இருப்பது குறித்துப் பதிவு செய்யாத வெளிநாட்டினர் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடுகடத்த உத்தரவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 நாட்களுக்கு மேல் தங்கியிருந்த ஒவ்வொரு நாளுக்கும் 998 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.86,000 அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழையவும் தடை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் நடவடிக்கைகள்
டிரம்பின் இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை போலவே சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. அமெரிக்காவில் கணிசமான அளவுக்கு இந்தியர்களே இருக்கும் சூழலில் இந்தியர்களையும் இது கடுமையாகப் பாதிக்கிறது. வரும் காலங்களில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிரான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
டிரம்பின் இதுபோன்ற நடவடிக்கைகளை அமெரிக்காவில் உள்ள குடிவரவு வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். டிரம்பின் சில உத்தரவுகள் அமெரிக்க அரசியலமைப்பிற்கே எதிராக இருப்பதாகவும் சாடி வருகிறார்கள். ஆனால், டிரம்ப் அதையெல்லாம் கேட்பதாகத் தெரியவில்லை. அவர் தனது நிலைப்பாடுகளில் உறுதியாகவே இருக்கிறார். அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கவே இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக அவரது ஆதரவாளர்களும் அவருக்குத் தொடர்ந்து சப்போர்ட்டு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications