எல்லாம் வேஸ்ட்? யூடர்ன் போட்ட அமெரிக்கா! உக்ரைன் ரஷ்யா போர் தொடருமாம்.. டிரம்ப் அவ்வளவு பேசினாரே
வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக முயன்று வருகிறார். இதற்காகத் தான் அவர் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதினை கூட நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இதற்கிடையே உக்ரைன் மோதலை அமெரிக்காவால் முடிவுக்குக் கொண்டு வர முடியாமலேயே போகலாம் என்றும் போர் தொடர்ந்தால் பல ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியிருக்கிறார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் போரை ஆரம்பித்தார். அப்போது முதல் மோதல் தொடர்கிறது. தொடக்கத்தில் இந்த மோதல் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் ஆயுத சப்ளை செய்யப் போர் வருடக் கணக்கில் தொடர்ந்தது.

டிரம்ப் முயற்சி
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பினரும் உதவினாலும் கூட அதற்குப் பலன் கிடைக்காமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் நேரடியாக இறங்கியிருக்கிறார். இரு தரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டு வர அவர் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காகத் தான் அவர் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதினையும் கூட நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சூழலில் தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரு சூழ்நிலையை உருவாக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கும் என்ற அவர், ஆனால் அது சாத்தியமாகாமல் போகலாம் என்று கூறியிருக்கிறார்.
போர் தொடரலாம்
இது தொடர்பாகப் பிரபல அமெரிக்கச் செய்தி ஊடகத்திடம் பேசிய அவர், "நாங்கள் அமைதியை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கத் தொடர்ந்து முயல்வோம். ஆனால் அது எங்களால் முடியாமல் போகலாம்.. அமைதியை உருவாக்க முடியவில்லை என்றால் போர் தொடரும். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து இறப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், அந்த நிலைக்குச் செல்ல நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

இன்று முக்கிய மீட்டிங்
அமெரிக்க அதிபர் டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்திற்கு வர உக்ரைனுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதற்காகவே உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை மற்றும் ஐரோப்பிய தலைவர்களை டிரம்ப் வெள்ளை மாளிகையில் இன்று நேரில் சந்திக்கிறார்.
விட்டத்தர வேண்டும்
இந்தச் சந்திப்பில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பேசிய ரூபியோ, "ரஷ்ய அதிபர் புதின் உடன் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பதை டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் தெரிவிப்பார். மேலும், உக்ரைனுக்கான அமெரிக்கா வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்" என்றார். மேலும், அமைதி ஒப்பந்தம் முடிவடைய வேண்டுமானால் இரு தரப்பினரும் சில விஷயங்களை விட்டுத் தர வேண்டும் என்று ரூபியோ தெரிவித்தார்.
இப்போதைக்கு இருக்கும் திட்டத்தின்படி ரஷ்யா தான் ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் சில பகுதிகளை விட்டுக் கொடுக்கும். அதற்குப் பதிலாக உக்ரைன் கிழக்கில் உள்ள பகுதியை விட்டுக்கொடுக்கும். இருப்பினும், உக்ரைன் நிலப்பரப்பை விட்டுத்தர ஜெலன்ஸ்கி ரெடியாக இல்லை என்றே சொல்லப்படுகிறது. இதை குறிப்பிடும் வகையிலேயே போர் தொடரலாம் என்று ரூபியோ சொல்லியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications