கிரீன் கார்டு இருந்தால் கூட இனி நிலம் வாங்க முடியாது! திடீர் தடை விதிக்கும் அமெரிக்க மாகாணம்
வாஷிங்டன்: டிரம்ப் வருகைக்குப் பிறகு அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே அங்கு வெளிநாட்டினர் நிலத்தை வாங்குவதையே தடை செய்யும் வகையிலான ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏன் இதுபோன்ற சட்டம்.. இதனால் யாருக்குப் பாதிப்பு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவை டிரம்ப் அதிபராகும் முன்பு, டிரம்ப் அதிபரான பிறகு எனச் சுலபமாகப் பிரிக்கலாம்.. குறிப்பாக வெளிநாட்டினரைக் குறிவைத்து அங்கு ஏகப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் கூட பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். டிரம்ப் அரசு மட்டுமின்றி அங்குள்ள உள்ளூர் மாகாண அரசுகளும் கூட இதுபோன்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

புதிய சட்டம்
இதற்கிடையே அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இப்போது புதிய மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் கூட வெளிநாட்டினர் குறிப்பிட்ட பகுதிகளில் நிலம் வாங்க முடியாது.
இந்த சட்டத்தின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக, ஓஹியோவின் ராணுவ தளங்கள், நீர் நிலையங்கள், எரிவாயு குழாய்கள் உள்ள பகுதிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு இருக்கும் பகுதிகளைச் சுற்றி 40 கி.மீ சுற்றளவில் நிலம் வாங்குவதற்குத் தடை விதிக்கப்படும். அதேநேரம் அனைத்து வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தாது.
எந்த நாடுகள்
சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா, கியூபா மற்றும் வெனிசுலா போன்ற "எதிரி" நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே நிலத்தை வாங்க முடியாது. மேலும், சில குறிப்பிட்ட அதீத சென்சிட்டிவான பகுதிகளில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும் கூட நிலத்தை வாங்க முடியாது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்காவை அழிக்க நினைப்பவர்களிடமிருந்து அமெரிக்க நிலத்தைப் பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்று எம்பி டெர்ரி ஜான்சன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்த மசோதாவை முன்மொழிந்த எம்பி ஏஞ்சலா கிங் கூறுகையில், "நமது மக்களைக் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இது தொடர்பாக பெடரல் அரசு சட்டம் இயற்றும் வரை, நமது மின் நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிவாயு குழாய்கள், ரயில் பாதைகள் மற்றும் ராணுவ தளங்களை வெளிநாட்டு உளவு கண்காணிப்பிலிருந்து பாதுகாக்க மாகாண அரசுகளே இதுபோல முன்வர வேண்டும்" என்றார்.
வாங்க முடியாது
முன்பு ஏற்கனவே இதுபோன்ற இடங்களில் நிலம் வைத்திருக்கும் வெளிநாட்டினர் இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த சொத்துக்களை விற்க வேண்டும் என்ற விதி இருந்தது. இருப்பினும், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பின்னர் அது நீக்கப்பட்டது. தற்போதைய புதிய விதிகளின்படி ஏற்கனவே இந்த பகுதிகளில் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை வைத்திருப்போர் தொடர்ந்து அதை வைத்திருக்கலாம். புதிதாக மட்டுமே எந்தவொரு சொத்தையும் வாங்க முடியாது.
எந்த நிறுவனங்களுக்குத் தடை இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வெளிப்படையாக ஒரு ரெஜிஸ்டரை பராமரிக்க வேண்டும் என்றும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு
அதேநேரம் இந்த சட்டத்திற்கு அங்குக் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. ஆசியாவிலிருந்து வரும் மக்களுக்கு எதிராகப் பாகுபாட்டைக் காட்டுவது போல இந்தச் சட்டம் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது ஒரு இனவெறி சட்டம் என்பதால் இதை எதிர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இது அமெரிக்க அரசியலமைப்பிற்கே எதிராக உள்ளதாகவும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. மேலும், இதுபோல குறிப்பிட்ட நாட்டினர் என முதலில் சொன்னாலும் பிறகு மொத்தமாக அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை விதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications