போர்க்களமான அமெரிக்க தேர்தல் களம்.. கருப்பின போராட்டக்காரர்கள்- டிரம்ப் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த முறை கடுமையான போராட்டக்களமாக மாறி இருக்கிறது. போர்ட்லாந்தில் கருப்பின மக்களுக்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த வன்முறையில் பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த 46 வயதான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுத்தில் மிதித்து கொன்றார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கடந்த 3 மாதங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்க தேர்தல் களத்திலும் போராட்டம் பரவியது.
போர்ட்லாந்தில் கருப்பின மக்களுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் போராடி வரும் நிலையில், இதுபற்றி கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், 'வன்முறையால் சூழப்பட்ட நகரமாக போர்ட்லாந்து மாறி வருகிறது,' என்று கூறினார்.

கருப்பின போராட்டக்காரர்கள்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் 600 வாகனங்களில் போர்ட்லாந்தின் மையப்பகுதிக்குள் பேரணியாக நுழைந்தார்கள். அவர்களை போராட்டக்காரர்கள் உள்ளே வரவிடாமல் சாலையின் குறுக்கே நின்றும், பாலங்களில் தடுப்பு ஏற்படுத்தியும் தடுத்தனர். இதைத் தொடர்ந்து, டிரம்ப் ஆதரவாளர்கள் - போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

பயங்கர மோதல்
பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட பலரை போலீசார் உடனடியாக செய்தனர். போர்ட்லாந்து நகரமே போர்க்களமாக மாறி உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அந்த நகரத்திற்குள் வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆல்டர் பகுதியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் சுருண்டு விழுந்து பலியானார். வன்முறை காரணமாக கருப்பின போராட்டக்காரர்கள் மற்றும் டிரம்ப் ஆதரவாளர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு
இதற்கிடையே அமெரிக்காவின், விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள கனோஷா பகுதியில் ஜேக்கப் பிளேக் (29) என்ற கருப்பின இளைஞரை போலீசார் 7 முறை துப்பாக்கியால் சுட்டதில், அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதனால், கருப்பின மக்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தை தீவிரமாக்கி வருகிறார்கள். இந்த போராட்டங்கள் காரணமாக அதிபர் தேர்தலில் 2வது முறையாக போட்டியிடும் டிரம்ப்பின் வாக்கு வங்கியை கடுமையாக பாதித்துள்ளது. அதேநேரம் , ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடெனுக்கும், துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசுக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
Recommended Video

பேஸ்புக்கில் போராட்ட பதிவு
அமெரிக்காவில் விஸ்கான்சினில் வன்முறை பரவ பேஸ்புக்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. கனோஷாவில் கருப்பின வாலிபர் பிளேக்கை போலீசார் சுட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன் ஆயுதங்களுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்கும் பதிவு ஒன்று பேஸ்புக்கில் பதிவானது. அதன்பின்னரே போராட்டம் வெடித்து வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். சர்ச்சைக்குரிய பதிவை பேஸ்புக் உடனடியாக நீக்கிவிட்டது என்றாலும், வன்முறைக்கு காரணமாக அந்த பதிவு அமைந்தது.












Click it and Unblock the Notifications