டொனால்ட் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்- இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டொனால்ட் டிரம்ப்பை நீக்க கோரும் தீர்மானத்தின் மீது இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் (ஜோ பைடன்) வெற்றி பெற்றார். ஆனால் அதிபராக உள்ள குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இந்த வெற்றியை ஏற்க முடியாது என கூறி வந்தார்.

டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த பல்வேறு வழக்குகளும் தள்ளுபடியான நிலையில் ஜோ பிடன் வெற்றியை ஏற்றாக வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் டிரம்ப். இதனையடுத்து வரும் 20-ந் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்க உள்ளார்.
இதனிடையே கடந்த 6-ந் தேதி டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து வரலாறு காணாத வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளை இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாஷிங்டனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டிவிட்ட டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications