”வரலாற்றையே மாற்றும்” டிரம்ப் அறிவிப்புக்கு உடனே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொடுத்த ரியாக்ஷன்
வாஷிங்டன்: காசா முனையை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் திட்டம் வரலாற்றை மாற்றக்கூடியது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், காசாவை அமெரிக்கா கைப்பற்றி மேம்படுத்தும் என்று பேசியது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் ஏற்பட்டது. 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரினை முடிவுக்கு கொண்டு வர கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டன. நீண்ட முயற்சிக்கு பிறகே கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தனம் செய்ததில் போர் முடிவுக்கு வந்தது.

இஸ்ரேல் காசா மோதல்
இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், கடந்த மாதம் முதல் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சில யோசனைகளை முன்வைத்து இருந்தார். அதில், காசா பகுதியில் இருந்து அதிகப்படியான பாலஸ்தீனிய அகதிகள் வெளியேறும் சூழலில் அவர்களை ஜோர்டான், எகிப்து மற்றும் இதர அரபு நாடுகள் அதிகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் கூறினார். ஆனால், இந்த கோரிக்கையை மத்திய கிழக்கு நாடுகள் நிராகரித்தன.
இதற்கிடையே, அமெரிக்காவிற்கு வருகை தருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா வந்தடைந்தார். வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினர். காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பதால் சர்வதேச அளவில் இது முக்கியத்துவம் பெற்றது.
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்
இந்த சந்திப்புக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் டிரம்பும் பெஞ்சமின் நெதன்யாகுவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், "காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றார். அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் சாத்தியம் உள்ளதாக கூறிய டிரம்ப், காசா பகுதியில் உள்ள ஆபத்தான வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம். சேதம் அடைந்த கட்டிடங்களை அகற்றி வளர்ச்சி பணிகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்" என்றார்.
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு பேச்சு
டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் அறிவிப்பு பற்றி கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் யோசனை வரலாற்றை மாற்றக்கூடிய ஒன்றாகும். மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இஸ்ரேல் ஒருபோதும் வலுவாக இருந்தது இல்லை. ஈரானின் பயங்கரவாத அச்சுறுத்தலும் பலவீனமக இல்லை.
எனினும், எங்கள் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வருவது பற்றியும் எதிர்காலம் குறித்தும் ஆலோசித்தோம். காசாவில் இஸ்ரேலுக்கு மூன்று இலக்குகள் உள்ளன. ஹமாஸின் ராணுவத்தை அழிப்பது, நிர்வாகத்தை கட்டமைப்பை சீர்குலைப்பது, எங்கள் அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிப்பது ஆகியவை உள்ளன. காசா இனி ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications