"ரூ.1.77 லட்சம்!" எல்லா அமெரிக்கர்களுக்கும் ட்ரம்ப் கொடுத்த ஜாக்பாட்! இனி முழுக்க முழுக்க பண மழைதான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் எல்லா அமெரிக்கர்களுக்கும் 2000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.77 லட்சத்தை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். உலக நாடுகள் மீது வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை அமெரிக்கர்களுடன் பகிர்ந்து அளிக்கப் போவதாகச் சொல்லி டிரம்ப் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் முதலில் உலக நாடுகள் மீது வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். பின்னர் இடையில் சில காலம் வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிறகு மீண்டும் உலக நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்தார். அதாவது வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தக் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

டிரம்ப்
இருப்பினும், இந்த வரியைப் பல்வேறு தரப்பினும் எதிர்த்து வருகிறார்கள். அமெரிக்காவிலேயே கூட மக்கள் பலரும் இந்த வரியைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இது வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் எனப் பல்வேறு தரப்பினரும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், டிரம்ப் வரி விவகாரத்தை விடுவதாக இல்லை.
உலக நாடுகள் மீது தான் விதிக்கும் வரி சரியானது தான் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே இந்த வரி மூலம் கிடைக்கும் தொகையை அமெரிக்க மக்களுக்குப் பிரித்துத் தரப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் பணக்காரர்கள் தவிர அனைத்து அமெரிக்கர்களுக்கும் விரைவில் குறைந்தது $2,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.77 லட்ச ரூபாயைத் தரப்போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கர்களுக்கு 2000 டாலர்
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தனது வர்த்தகக் கொள்கையை விமர்சிப்பவர்களையும் டிரம்ப் கடுமையாகச் சாடினார். இது தொடர்பாக அவர் மேலும், "வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள்! இன்று நாம் உலகிலேயே பணக்கார, மிகவும் மதிக்கப்படும் நாடாக, கிட்டத்தட்ட பணவீக்கம் இல்லாமல், சாதனை பங்குச் சந்தை மதிப்புடன் இருக்கிறோம்.
வரிகள் மூலம் நமக்கு இப்போது பல டிரில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கிறது. இந்தப் பணத்தை வைத்து அமெரிக்காவின் $37 டிரில்லியன் தேசியக் கடனைக் குறைக்கப் பயன்படுத்தப் போகிறோம்.. அதற்கான நடவடிக்கை சீக்கிரம் எடுக்கப்படும். மேலும், பணக்காரர்களைத் தவிர்த்து, அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு நபருக்குக் குறைந்தபட்சம் $2,000 டாலர் டிவிடெண்ட் வழங்கப்படும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதுவே முதல்முறை
அதேநேரம் இந்த டிவிடெண்ட்டை எப்போது வழங்குவார்.. அது எப்படிப் பிரித்துத் தரப்படும் என்பது குறித்த விவரங்களை டிரம்ப் பகிரவில்லை. பொதுவாக வளரும் நாடுகளில் தான் மக்களுக்கு இதுபோன்ற உதவித்தொகைகள் அறிவிக்கப்படும். ஆனால், டிரம்ப் வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே இதுபோன்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அதேநேரம் டிரம்ப்பால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
முன்னதாக அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த பேட்டியில், வரி வருவாயைப் பயன்படுத்தி $38.12 டிரில்லியன் தேசிய கடனைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகக் கூறியிருந்தார். டிரம்ப்பும் கூட அமெரிக்கா அதே பாதையில் தான் பயணிக்கும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
பின்னணி
வரி விவகாரம் தொடர்பாக இப்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதாவது வரியை விதிக்கும் அதிகாரம் டிரம்ப்பிற்கு இல்லை.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி, அதன் மூலமாக மட்டும் வரி விதிக்க வேண்டும் என்பது குறித்த வழக்கு நடந்து வருகிறது டிரம்ப் தனது நிர்வாக அதிகார வரம்பை மீறினாரா என்பது தொடர்பான இந்த வழக்கில் டிரம்ப்பிற்கு எதிரான கருத்துகளையே அந்நாட்டு நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்தச் சூழலில் தான் டிரம்ப் அமெரிக்க மக்களுக்குப் பணத்தைக் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
வரிகள் தனது மிக வலிமையான பொருளாதார ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்க நீதிமன்றங்கள் தனது வரியை ரத்து செய்யாது என நம்புவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவுக்குப் பல டிரில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதாகவும் இது அமெரிக்காவை வலிமையாகவும், அதிகச் சுதந்திரமாகவும் மாற்றும் என டிரம்ப் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications