அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்து கோயிலில் தமிழில் பேனர் வைத்து வாக்கு சேகரிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்து சமூகத்தினரை கவரும் விதமாக டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தமிழிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹனுமன் கோவில் அருகே குடியரசுக் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அங்கு பிரசாரம் அனல் பறக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அதிபர் தேர்தலில முதலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், பிரசாரத்தில் தடுமாறியது ஆகியவற்றால் ஜோ பைடனுக்கு ஆதரவு குறைந்தது. இதையடுத்து போட்டிக்களத்தில் கமலா ஹாரிஸ் குதித்தார். கமலா ஹாரிஸ் - டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால், வெற்றியை பெற இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இருக்கும் கமலா ஹாரீசின் தாயாரின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இந்த கிராமம் உள்ளது. கமலா ஹாரிசின் தாய் வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மட்டும் இன்றி தமிழகத்தையும் பூர்வீகமாக கொண்டவர் என்பதால் கமலா ஹாரீஸுக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் ஆதரவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்து சமூககத்தினரை கவரும் விதமாக டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தமிழிலிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹனுமன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்து சமூகத்தினர் அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்த நிலையில், ஹனுமன் கோவில் அருகே உள்ள ஒரு இடத்தில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தனித்தனியாக பேனர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பேனர்களில் 'வலுவான கல்வி, செழித்த நாடு' என தமிழில் எழுதப்பட்டு குடியரசுக் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிடும் ஜே.டி. வான்ஸ் என்பவரின் மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்தான். வான்ஸின் மனைவியான உஷா சிலுகுரியின் தாயார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதனால், தெலுங்கிலும், தமிழிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications