மத்திய கிழக்கில் திடீரென யூடர்ன் போட்ட உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்.. அமெரிக்காவின் பிளான் என்ன
வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆர். ஜெரால்டு ஃபோர்டு மத்திய கிழக்கில் இருந்து கிளம்பி சென்றுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் இருந்து போர் கப்பல் புறப்பட்டுள்ளது.. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறாமல் உள்ளது. எனினும்,போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டித்து இருப்பதால் தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்
இருந்தாலும் ஈரானை பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ் எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு கப்பல் மத்திய கிழக்கில் இருந்து திரும்பியுள்ளது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த இந்த கப்பல் பாரசீக வளைகுடாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிகாரி இது பற்றி கூறுகையில், யுஎஸ்எஸ் ஆர். ஜெரால்டு ஃபோர்டு கப்பல் தற்போது, அமெரிக்க ஐரோப்பிய கமாண்ட் பிராந்தியத்தின் பொறுப்பு எல்லைக்குள் உள்ளது" என்றார். மேலும் அவர் கூறுகயில், "மத்திய கிழக்கு பகுதியில் தற்போது அமெரிக்க கடற்படையின் 20 போர்க்கப்பல்கள் உள்ளது. அவற்றில் யுஎஸ்எஸ் ஆப்ரஹாம் லின்கோல்ன் மற்றும் யுஎஸ் எஸ்ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் விமானம் தாங்கி கப்பல்களும் அடங்கும்" என்றார்.
எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தம்
யுஎஸ்எஸ் ஆர். ஜெரால்டு ஃபோர்டு கப்பல் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக ரோந்து பணியில் இருந்து வருகிறது. கரீபியன் பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளிலும் இந்த கப்பல் ஈடுபட்டது. கரீபியன் கடற்கரை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் படகுகள் மீது தாக்குதல் நடத்தியது. தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
மேலும், வெனிசுலா தலைவர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட சமயத்திலும் இந்த கப்பல் தீவிர கடல் பணியில் ஈடுபட்டு இருந்தது. இப்படி தொடர்ச்சியாக ரோந்தில் உள்ள நிலையில், கப்பலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கப்பலின் டாய்லட் சிஸ்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டதால், நீண்ட வரிசையில் வீரர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
திருப்தி இல்லை என டிரம்ப் பேச்சு
ஈரானுக்கு எதிராக மீண்டும் போரை தொடங்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று டிரம்பிடம் புதின் அண்மையில் நடந்த தொலைபேசி உரையாடலில் எச்சரித்துள்ளார். அது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய சூழலில்தான் அமெரிக்காவின் போர் கப்பல் திரும்பி சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, ஈரான் முன்மொழிந்துள்ள அமைதி நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறும் போது, "இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை" என்றார்.














Click it and Unblock the Notifications