"இந்தியாவில் உச்சத்தில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள்.." அமெரிக்கா பரபர ரிப்போர்ட்
வாஷிங்டன்: இந்தியாவில் உள்ள மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மத சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை நாசப்படும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பான ரிப்போர்ட்டை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான ரிப்போர்ட் நேற்று புதன்கிழமை வெளியானது.

ரிப்போர்ட்: அதில் குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் மத சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை நாசப்படுத்தும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மத சுதந்திரம் என்பது இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினையாகவே மாறியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகச் சர்வதேச மனித உரிமை நிபுணர்கள் அதில் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் கூறுகையில், "இந்தியாவில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள், வெறுப்பு பேச்சுக்கள், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
நட்பு நாடுகள்: இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமான நட்பு நாடுகளாக இருக்கும் நிலையில், இந்தியாவை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளைக் கொண்ட இந்த ரிப்போர்ட் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகச் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் மதவெறி தாக்குதல்கள் தொடர்பாகவும் அதில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காசா போரைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு அதிகரித்து இருப்பதாகவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தியா குறித்துப் பேசிய அவர், "இந்தியாவில், மதமாற்றத்தைத் தடுக்கும் வகையிலான சட்டங்கள், வெறுப்பைப் பரப்பும் பேச்சுக்கள், சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்றார்.
உள்ளூர் போலீஸ் ஆதரவு: அதேபோல சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கத் தூதர் ரஷாத் ஹுசைனும் இந்தியா குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக இந்திய போலீசார் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க தவறிவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் மதமாற்ற முயற்சி என்று கூறி சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதற்கு உள்ளூர் போலீசாரும் உதவியாக இருக்கிறார்கள். மேலும், பாதிக்கப்படும் சிறுபான்மையினர் மதமாற்றக் குற்றச்சாட்டில் கைதும் செய்யப்படுகிறார்கள்" என்றார்.
சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு பல ஆண்டுகளாக நீட்டித்து வருகிறது. இந்தியப் பிரதமர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அமெரிக்க அதிபர்கள், அது டிரம்ப் ஆக இருந்தாலும் சரி, தற்போதைய அதிபர் பைடனாக இருந்தாலும் தங்கள் நட்பை வெளிக்காட்டியுள்ளனர். சர்வதேச அளவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், அதற்கு செக் வைக்கும் வகையில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை இல்லை: இந்தியா மீதான விமர்சனங்கள் இருந்த போதிலும், தடுப்பு பட்டியல் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. அதேநேரம் இந்தியாவில் மத ரீதியான பாகுபாடுகள் அதிகரித்து வருவதால் இந்தியா மது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்தியா மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
இந்த ரிப்போர்ட்டில் பாகிஸ்தான் உட்படப் பல நாடுகள் குறித்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளனர். சில ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிரான கருத்துகள் மற்றும் பாகுபாடு மற்றும் முஸ்லீம்-விரோத விமர்சனங்கள் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், 9 ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களில் மத ரீதியான ஆடைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications