"சூரிய ஒளியை சூரியனுக்கே திருப்பி அனுப்ப போறேன்!" பூமியை குளிர்விக்க அமெரிக்க ஆய்வாளரின் பலே திட்டம்
வாஷிங்டன்: பருவநிலை மாற்றத்தால் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், வெப்பத்தைக் குறைக்க ஆய்வாளர்கள் பலே திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளார்கள்.
கடந்த 2023 ஆண்டு தான் பூமி அதன் வெப்பமான ஆண்டை பதிவு செய்தது. வரும் காலங்களில் பூமியில் பதிவாகும் வெப்பம் மேலும் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் பூமியின் வெப்பத்தைக் குறைக்க ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் இறங்கி உள்ளனர்.

இதற்கிடையே பூமியைத் தற்காலிகமாகக் குளிர்விக்க புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர். அதாவது சூரியனில் இருந்து வரும் சில கதிர்களை மீண்டும் விண்வெளிக்குத் திரும்பி அனுப்புவதே இந்தத் திட்டமாகும்.
கிளவுட் ப்ரைட்டனிங்: இதற்காக அவர்கள் கிளவுட் ப்ரைட்டனிங் (cloud brightening) என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும். இந்த மேகங்கள் சூரிய ஒளியின் ஒரு சிறிய பகுதியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி அனுப்பிவிடுமாம். இதன் காரணமாகப் பூமியின் ஒரு பகுதி வெப்பம் கணிசமாகக் குறையும்.
இந்த தொழில்நுட்பம் முழுமையாக வெற்றி அடைந்தால் அது மிகப் பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடல் மட்டம் உயர்வது உலகின் பல பகுதிகளுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறியுள்ள நிலையில், கடலின் மேல் இதுபோன்ற மேகங்களைப் பிரகாசமாக்கும் சாதனங்களை நிலைநிறுத்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.
பலே திட்டம்: கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சான் பிரான்சிஸ்கோவில் விமானத்தில் இருந்து அதிக வேகத்தில் உப்புத் துகள்களை வானத்தில் தூவியிருக்கிறார்கள். அதாவது உள்ளே வரும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மேகங்களைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம். 1990ல் பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஜான் லாதம் என்பவர் முன்மொழிந்த திட்டத்தை இப்போது இவர்கள் செயல்படுத்துகிறார்கள்.
இது தொழில்நுட்பம் ரொம்வே ஈஸியானது. அதாவது அதிக எண்ணிக்கையில் சிறிய நீர்த்துளிகள் பயன்படுத்தி அதன் மூலம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதே இதன் திட்டம்.. வானத்தில் உப்பு நீரை தெளிப்பதன் மூலம் நம்மால் இதை அடைய முடியும். அதேநேரம் இதில் நீர் துகள்களின் அளவு மிகவும் முக்கியமானது. துகள்கள் மிகவும் சிறியதாக இருந்தால், அவை பிரதிபலிக்காது. மிகப் பெரிய துகள் மேகங்களை இன்னும் குறைவாகப் பிரதிபலிக்கும் எனவே, அந்த சைஸ் முக்கியமானது.
தற்காலிக தீர்வு தான்: இது குறித்த ஆய்வு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இது வெற்றியடைந்தால் பூமியின் வெப்பத்தை இது கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், இது நிச்சயம் தற்காலிகமான தீர்வாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். பூமியில் வெளியாகும் க்ரீன் ஹவுஸ் வாயுக்களைக் குறைப்பதே புவி வெப்ப மயமாதலுக்கான நிரந்தர தீர்வாக இருக்கும்.
சூரிய ஒளியை மீண்டும் வானில் பிரதிபலிக்கும் இந்தத் திட்டம் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். ஏனென்றால் இதுபோல முறைகளை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால் அவை நிச்சயம் வானிலையை மொத்தமாக மாற்றும் என்று அவை வரும் காலங்களில் மிகப் பெரிய ஆபத்தைக் கொண்டு வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications