திடீரென சீனா சென்ற டாப் அமெரிக்க அமைச்சர்! அடுத்த வாரம் மோடி வேற அமெரிக்கா போகிறாரே! ஏன் முக்கியம்
வாஷிங்டன்: பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாட்கள் பயணமாக இன்று சீனா சென்றுள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல உறவு இல்லை. குறிப்பாக டிரம்ப் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமானது. அப்போது இரு நாடுகளும் மாறி மாறி வரியை உயர்த்திய சம்பவம் எல்லாம் நடந்தது.
இப்போது அமெரிக்க அதிபராக பைடன் உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான ஒரு உறவைக் கொண்டு வரத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.. அதன் ஒரு முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இப்போது சீனா சென்றுள்ளார்.

அமெரிக்கா: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று சீனா சென்றடைந்தார். கடந்த ஐந்தாண்டுகளில் அமெரிக்காவை சேர்ந்த டாப் அமைச்சர் ஒருவர், சீனா செல்வது இதுவே முதல்முறை. உலகின் இரு டாப் பொருளாதாரங்களுக்கு இடையே மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அமைச்சரின் இந்தப் பயணம் நிலைமையைச் சுமூகமாக்க முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டனி பிளிங்கன் முதலில் கடந்த பிப். மாதமே சீனா செல்லவிருந்தார். இருப்பினும் சரியாக அப்போது தான் சீன உளவு பலூன் அமெரிக்கா மேலே பறந்தது சர்ச்சையானது. இதையடுத்து அவரது பயணம் சில முறை ஒத்திவைக்கப்பட்டது. பைடன் அதிபரான பிறகு அங்குள்ள டாப் தலைவர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல்முறையாகும்.
சீனா அமைச்சர்களுடன் சந்திப்பு: இரண்டு நாட்கள் நீட்டிக்கும் இந்த பயணத்தில், அவர் சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங், சீனாவின் உயர்மட்ட தூதர் வாங் யீ ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் கூட சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் சூழலைத் தவிர்த்து ஆரோக்கியமான போட்டி தொடர்ந்து நடப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தெரிகிறது.
இந்த இரு டாப் நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல் என்பது பங்குச் சந்தை, வர்த்தகம், சர்வதேச விநியோகச் சங்கிலி என அனைத்தையும் பாதிக்கும் என்பதால் இந்தப் பயணத்தை உலக நாடுகள் கவனமாகக் கவனித்து வருகின்றன. சீனா செல்லும் முன்பு, அமெரிக்காவில் செய்தியாளரிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன் தான் மூன்று முக்கிய நோக்கங்களுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "நெருக்கடிகளைத் தவிர்க்கும் வழிகளை அமைப்பது, அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் நலன்களை முன்னேற்றுவது, பிரச்சினைகள் குறித்து நேரடியாகப் பேசி தீர்ப்பது ஆகிய 3 விஷயங்களே எனது பயணத்தின் பிரதான நோக்கம்" என்றார். இவரது பயணம் வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் வரும் நாட்களில் அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன், வர்த்தக அமைச்சர் ஜினா ரைமண்டோ உள்ளிட்ட பல டாப் தலைவர்கள் சீனா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி: அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் செல்லும் நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்தப் பயணம் நடந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை விவகாரம் தொடங்கிப் பல விஷயங்களில் மோதல் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் பிரதமர் பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க டாப் அமைச்சர் சீனா சென்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications