US Tariff: நாளை டிரம்ப் - புதின் சந்திப்பு.. உடன்பாடு வராவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரியாம்.. மிரட்டும் US
வாஷிங்டன்: அலஸ்காவில் நாளை நடக்கும் டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பு நன்றாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு 2 ம் நிலை (Secondary US Tariff) வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். 25 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு இந்த மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது.

இதனால் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார்.
கூடுதல் வரி என மீண்டும் மிரட்டல்
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது அமெரிக்காவின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம் நாட்டை மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக புளூம்பெர்க் டிவியில் அவர் பேசியதாவது: டிரம்ப் - புதின் ஆகியோர் நாளை அலஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர்.
இந்த சந்திப்பின் முடிவு என்பது முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் இந்தியாவுக்கு கூடுதலாக 2ம் நிலை வரிகள் விதிக்கப்படும். நாளை பேச்சுவார்த்தை சரியாக போகாவிட்டால் பொருளாதார தடை அல்லது 2ம் நிலை வரி விதிப்பு கொண்டு வரப்படும். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்கு தண்டனை அறிவிக்கப்படும்'' என்று மிரட்டி உள்ளார்.
இந்தியாவுக்கு பெரிய சிக்கல்
ஏற்கனவே அமெரிக்கா நமக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இதில் முதற்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. மீதமுள்ள 25 சதவீத வரி விதிப்பும் விரைவில் வர உள்ள நிலையில் பொருளாதார தடை அல்லது 2ம் நிலை வரி நம் நாட்டுக்கு விதிக்கப்படும் பட்சத்தில் அது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதனால் நாளைய தினம் நடக்கும் டிரம்ப் - புதின் சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாளை தினம் அமெரிக்காவின் அலஸ்காவில் டிரம்ப் - புதின் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா - ரஷ்யா உறவு படுமோசமாக உள்ளது. இதற்கிடையே தான் டிரம்ப் போரை நிறுத்தும் பணியில் இறங்கி உள்ளார். இதனால் நாளை டிரம்ப் - புதின் ஆகியோர் நேரில் அலஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர்.
நாளைய பேச்சுவார்த்தை ஏன் முக்கியம்?
இந்த சந்திப்பு சுமூகமாக அமையும் பட்சத்தில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தலாம். அதேபோல் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கலாம். இதன்மூலமாக நம் நாட்டுக்கும் அமெரிக்காவின் வரி என்பது கூடுதலாக விதிப்பதை தடுக்கலாம். ஆனால் நாளைய தினம் போர் நிறுத்தத்துக்கு புதின் வைக்கும் கோரிக்கையை டிரம்ப் ஏற்பாரா? ஒருவேளை டிரம்ப் ஏற்றால் அதனை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் நாளைய தினம் நடக்கும் டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி நம் நாட்டுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி தான் டிரம்ப் நமக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளார். நாளை ரஷ்யா - அமெரிக்கா இடையே சுமூக உறவு ஏற்படும் பட்சத்தில் அந்த வரி கூட சில காலம் நிறுத்தி வைக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications