H-1B விசா விண்ணப்பதாரர்களே உஷார்.. டிரம்ப் போட்ட உத்தரவு! இன்று முதல் அமலாக்கும் அமெரிக்கா!
வாஷிங்டன்: H-1B பணி விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்தோரான H-4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தளப் பரிசோதனையை அமெரிக்கா, இன்று முதல் தீவிரமாக்குகிறது. எனவே விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சோஷியல் மீடியா கணக்குகளை ஒருமுறைக்கு, இருமுறை செக் செய்துக்கொள்வது முக்கியம்.
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், H-1B, H-4, F, M, மற்றும் J விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்கள் சமூக வலைத்தள சுயவிவரங்களை 'பப்ளிக்' என மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் நுழைபவர்களின் சோஷியல் மீடியாக்களை, அந்நாட்டு அதிகாரிகள் நோட்டமிடுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவர்களின் சோஷியல் மீடியா அக்கவுண்ட்டுகள் ஏற்கெனவே பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பரிசோதனையாது H-1B விசா தாரர்களுக்கும், அவர்களுடன் அமெரிக்காவுக்குள் நுழைபவர்களுக்கும் தற்போது விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது
என்னதான் நீங்கள் திறமையானவர்களாக இருந்தாலும், அதற்காக வேலை வழங்கப்படுவதில்லை. மாறாக விசா என்பது அமெரிக்க அரசாங்கத்தின் விருப்பத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல தேசிய பாதுகாப்பு அல்லது பொது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நபர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆகவே, கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நாங்கள் சரிபார்க்கிறோம். அதனால்தான் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று அந்நாட்டு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
H-1B விசா என்பது, மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்திக்கொள்ள பயன்படுகிறது. அதேபோல H-4 விசா என்பது, H-1B விசா வைத்திருப்பவர்களுடன் வரும் குடும்பத்தினருக்கானதாகும். ஆனால், தற்போது விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள், குறிப்பாக இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை அதிக அளவில் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
வெளிநாட்டு நபர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கம். நம்மூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக சிலர் பேசுவதை போல, அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், இந்தியர்களுக்கு எதிராகவும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர். எனவேதான் சோஷியல் மீடியாக்களை செக் செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர், ரூ.4.50 லட்சமாக இருந்த H-1B விசா கட்டணத்தை, டிரம்ப் சமீபத்தில் ரூ.90 லட்சமாக உயர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications