அமெரிக்காவிற்கே ஆப்பாக மாறும் டிரம்பின் வரி விதிப்பு.. விலைவாசி கூடுவதால் புலம்பி தவிக்கும் மக்கள்!
வாஷிங்டன்: இந்தியா மீது டிரம்ப் மேற்கொண்ட வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால், அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கடந்த 1933 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அமெரிக்கர்கள் அதிக வரி விதிப்பை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க செனட் உறுப்பினர் பட்டி முர்ரே கூறியிருக்கிறார். டிரம்பின் இந்த வரி விதிப்பால் ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் $2,400 இழக்கப் போகிறது என்றும் கூறினார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க தேர்தலின் போது பிரசாரம் செய்த டிரம்ப், அமெரிக்க நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்ய வரி
பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றெல்லாம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவின் பொருட்களுக்கு பல்வேறு நாடுகளும் அதிக அளவு வரி விதிப்பதாக விமர்சித்த டிரம்ப், பரஸ்பர வரியை விதித்தார். அதாவது, அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
அதன்படி பரஸ்பர வரியை விதித்தார். பின்னர், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு புதிய வரி விதிப்பை அமல்படுத்தினார். இந்தியாவுடன் வர்த்தக பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால் 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இதையடுத்து, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டித்த டிரம்ப், இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கூடுதலாக வரியை விதிக்க போவதாக கூறினார்.
50 சதவீத வரி விதிப்பு
இந்தியா தனது நலன் கருதியே முடிவு எடுப்போம் என்று உறுதியாக கூறிவிட்டதால், இந்திய பொருட்கள் மீது தற்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் விதித்த இந்த வரி விதிப்பு காரணமாக, அமெரிக்க சந்தைகளுக்கு இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி மிரட்டலுக்கு பணியாத இந்தியா, மாற்று வழிகளை மேற்கொண்டு ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, டிரம்ப் மேற்கொண்ட வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால், அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
புலம்பி தவிக்கும் அமெரிக்க மக்கள்
குறிப்பாக டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அமெரிக்காவில் பல்வேறு விலைகளின் விலையும் உயர்ந்துவிட்டதாக தரவுகள் காட்டுகின்றன. மின் கட்டணம், மளிகை பொருட்கள் விலை உள்ளிட்டவை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். போதாக்குறைக்கு இந்தி அஞ்சல்துறை உள்பட 25 நாடுகள் அமெரிக்காவிற்கு சரக்குகளை கொண்டு செல்வதை நிறுத்தியுள்ளன.
இதனால், விற்பனையாளர்கள், சரக்கு கப்பல் வாயிலாக அமெரிக்க நுகர்வோர்களுக்கு பொருட்களை அனுப்புகின்றனர். போக்குவரத்து செலவு அதிகரிப்பால் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய தேதிப்படி, 1933 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அமெரிக்கர்கள் அதிக வரி விதிப்பை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க செனட் உறுப்பினர் பட்டி முர்ரே கூறியிருக்கிறார்.
உணவுப்பொருளின் விலை உயரும்
இது தொடர்பாக அவர் கூறுகையில், டிரம்பின் வரி விதிப்பால் ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் $2,400 இழக்கப் போகிறது. "டிரம்பினால்தான் நீங்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் அதிகமாக பணம் செலுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உணவுப்பொருளின் விலை 3.4 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடைசியாக 2.9 சதவீதமாக பணவீக்கம் இருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்த அளவு பணவீக்கம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications