இனி அமெரிக்காவில் கால் வைக்கவே முடியாதாம்.. இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை! என்ன காரணம்
வாஷிங்டன்: டிரம்ப் வந்த பிறகு அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். டிரம்ப் நிர்வாகம் பல கெடுபிடிகளை விதித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் திடீரென எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விசா தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் நிரந்தரமாகவே அமெரிக்காவுக்கு வர முடியாமல் போகலாம் என்று அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் விசா நடைமுறைகளைக் கெடுபிடி காட்டி வருகிறது. முதலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற உடன் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் நாடு கடத்தப்பட்டனர். ஆனால், சீக்கிரமே சட்டப்பூர்வமாக அமெரிக்கா சென்றவர்களும் கூட சிக்கல் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க விசா விதிமுறைகள்
சிறு சிறு விதிமுறைகளை மீறினால் கூட நாடுகடத்தப்படும் சம்பவங்கள் நடக்கிறது. விதிமுறைகளை மீறுவது மட்டுமின்றி, விசாரணைக்காக அல்லது தவறாகக் கைது செய்யப்பட்டிருந்தால் கூட அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். மேலும், இந்தியர்கள் அமெரிக்கா செல்வது குறித்தே யோசித்தும் வருகிறார்கள்.
இதற்கிடையே இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் விசா நிபந்தனைகளை மதிக்க வேண்டும் என்றும் விசா காலகட்டத்தை மீறி இருக்கக்கூடாது என்றும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இதை மீறினால் உடனடியாக விசா ரத்து செய்யப்பட்டு , நாடு கடத்தப்படுதல் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் வார்னிங்
இது தொடர்பான இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் , "உங்கள் அமெரிக்க விசா நிபந்தனைகளையும், அமெரிக்காவில் நீங்கள் தங்கியிருக்கும் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் மதித்துப் பின்பற்றுங்கள். உங்கள் I-94 விண்ணப்பத்தில் இருக்கும் அனுமதிக்கப்பட்ட தேதியைக் கவனமாகப் பின்பற்றுங்கள். அதைத் தாண்டி அமெரிக்காவில் தங்கியிருந்தால் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம்.
மேலும், வரும் காலத்தில் எந்தவொரு விசாவுக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும். அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி தங்குவது எதிர்காலத்தில் உங்களை அமெரிக்காவுக்கு வரவும் வேலை செய்யவும் முடியாமல் ஆக்கிவிடும்" என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உடனான வர்த்தகம் குறித்த விஷயத்தில் இந்தியா அமெரிக்கா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கத் தூதரகத்தின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சர்ச்சை கருத்து
அதேநேரம் அமெரிக்காவில் இருக்கும் சில அரசியல்வாதிகளும் கூட வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கூற ஆரம்பித்துள்ளனர். ஜார்ஜியாவின் எம்பி மார்ஜோரி டெய்லர் கிரீன் நேரடியாகவே இந்தியாவைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியா பறிப்பதாகவும் இந்தியர்களுக்கு விசா வழங்கவே கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அமெரிக்க வேலைகளைப் பறிக்கும் இந்திய H1-B விசாக்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், மேலும் உக்ரைன்-ரஷ்யா போருக்கு நிதி வழங்குவதையும், ஆயுதங்களை அனுப்புவதையும் நிறுத்த வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள்
அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கூட அவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாகவே அமெரிக்காவுக்குச் சென்றவர்களாக உள்ளனர். மேலும், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பையும் கொடுத்து வருகிறார்கள். அப்படியிருக்கும்போது இந்தியர்களைக் குறிவைத்து இதுபோல வரும் அறிவிப்புகள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications