இந்தியாவுடன் உச்சமாகும் மோதல்.. டிரம்பின் வர்த்தக ஆலோசகரின் பெரிய குற்றச்சாட்டு.. கவனிக்கும் ரஷ்யா
வாஷிங்டன்: ‛‛ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் கிடைக்கும் டாலரை தான் இந்தியா பயன்படுத்தி வருகிறது. முந்தைய அதிபர் பைடன் நிர்வாகம் இந்த பைத்தியக்காரதனத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் டிரம்ப் ஏற்கவில்லை. நேரடியாக எதிர்க்கிறோம்'' என்று இந்தியாவை மீண்டும் சீண்டி உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மீதான நம்பிக்கையை நம் நாடு இழந்துள்ளது. இதனால் இந்தியாவும், சீனாவும் கைகோர்க்க தொடங்கி உள்ளது.

இப்படியான சூழலில் தான் டிரம்ப் மற்றும் அவரது நிர்வகத்தில் உள்ளவர்கள் நம் நாட்டை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ. இவர் தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறார்.
டிரம்பின் ஆலோசகர்
தற்போது அவர் மீண்டும் நம் நாட்டின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக பீட்டர் நவரோ தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ இந்தியா எங்களின் டாலரை பயன்படுத்தி ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகத்தைப் பற்றியது மட்டுமல்ல.. இது புதினின் போர் இயந்திரத்திற்கு இந்தியா வழங்கிய உள்ள நிதியை பற்றியதாக உள்ளது.
30% அதிகரித்த கச்சா எண்ணெய்
உக்ரைன் மீது போர் தொடங்காத சமயத்தில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து தனது நாட்டின் தேவையில் 1 சதவீதம் கச்சா எண்ணெயை மட்டுமே வாங்கியது. ஆனால் இன்று? 30 சதவீதத்துக்கும் அதிகமான ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. தினமும் 1.5 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு என்பது உள்நாட்டின் தேவையை பொறுத்ததாக இல்லை. இந்தியாவின் லாப வெறி நோக்கில் நடத்தப்படுகிறது.
பைத்தியக்காரத்தனம்
இந்த செயல் இந்தியாவை கச்சா எண்ணெய் லாபி நாடாக மாற்றி உள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக பெரிய அளவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையமாகவும், கச்சா எண்ணெய் பணமோசடி மையமாகவும் இந்தியா மாறி உள்ளது. இந்தியா இப்போது ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்கிறது. இது இறக்குமதி செய்யும் ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து 50 சதவீதத்தை விட அதிகம்.
முந்தைய அதிபர் பைடன் நிர்வாகம் இந்த பைத்தியக்காரத்தனத்தை ஏற்றது. ஆனால் டிரம்ப் ஏற்கவில்லை. நேரடியாக எதிர்க்கிறார். இந்தியா மீதான 50 சதவீத வரி என்பதில் 25 சதவீதம் நியாயமற்ற வர்த்தகத்துக்காகவும், 25 சதவீதம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காகவும் போடப்பட்டுள்து. உக்ரைன் அமைதியை கொண்டு வருவதற்கான பாதை இந்தியா வழியாக தான் செல்கிறது.
அமெரிக்கா டாலரை பயன்படுத்துவதாக...
இந்தியா ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் மூலமாக நிதியுதவி செய்கிறது. இது அமெரிக்க ஏற்றுமதியாளர்களை தண்டிக்கிறது. நாங்கள் இந்தியாவுடன் 50 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். அதே சமயத்தில் எங்களுடனான வர்த்தகத்தில் கிடைக்கும் டாலர்களை பயன்படுத்தி ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது.
இந்தியா மூலம் கிடைக்கும் டாலரை வைத்து உக்ரைனில் ரஷ்யா போர் மூலமாக கொலையை செய்கிறது. அதற்கு இந்தியா உதவுகிறது. அதேபோல் இந்தியா - ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை தொடர்ந்து வாங்குகிறது. இதனை இந்தியா மாற்ற வேண்டும். மேலும் இந்தியாவில் ஆலைகளை உருவாக்க அனுமதி கோருகிறது. அதனை இந்தியா ஏற்கவில்லை'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications