"நூற்றாண்டு இடைவெளி.." அன்று டைட்டானிக்.. இன்று டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து! இத்தனை ஒற்றுமைகளா
வாஷிங்டன்: டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்கள் இருக்கும் இடத்திற்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டான் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து விபத்தில் சிக்கியுள்ள நிலையில், இந்த இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளை நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகில் எத்தனையோ கப்பல்கள் விபத்தில் சிக்கியிருந்தாலும் பெரும்பாலானோருக்கு நினைவில் வருவது டைட்டானிக் கப்பல் விபத்து தான். மனித வரலாற்றில் மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இதற்கிடையே மூழ்கிக் கிடக்கும் கப்பலின் பாகங்களைப் பார்க்கச் சென்ற ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டான் கேட்டும் இப்போது விபத்தில் சிக்கியது. இரண்டிற்கும் இடையேயான ஒப்பந்தத்தைப் பார்க்கலாம்.

டைட்டானிக்: சுமார் 4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, அப்போதே 1.5 மில்லியன் பவுண்ட் மதிப்பில் உருவாக்கப்பட்ட கப்பல் தான் டைட்டானிக் கப்பல்.. இது தனது முதல் பயணத்திலேயே கடந்த 1912 ஏப்ரல் 15ஆம் தேதி பனிப்பாறைகளில் மோதி கடலில் மூழ்கியது. இது வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கப்பலில் சுமார் 2200 பேர் இருந்த நிலையில், அவர்களில் சுமார் 1500 பயணிகள் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்தக் கப்பல் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் இருக்கிறது. டைட்டானிக் மூழ்கிய பிறகு அது எங்கே இருக்கிறது என்பதே ஆய்வாளர்களுக்குப் பல காலம் தெரியவில்லை. தொடர்ச்சியான ஆய்வுகளுக்குப் பின்னரே அதன் பகுதிகள் எங்கே இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் 1985ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர்.
ஆய்வுகள்: கப்பலின் பகுதிகள் பல ஆண்டுகளாக அங்கேயே இருந்தது. அதை விரிவாக ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அது எப்படி பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது எப்படி என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் தொடர்பான முழு 3டி படம் வெளியிடப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக அங்கே பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே டைட்டானிக் பாகங்களைச் சுற்றுலாப் பயணிகள் காணச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலும் விபத்தில் சிக்கியுள்ளது. catastrophic explosion எனப்படும் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடிப்பில் உள்ளே இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர்.
ஒற்றுமை: டைட்டானிக் கப்பல் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு 1912ஆம் ஆண்டு மூழ்கியது. இப்போது அதே டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டான் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியுள்ளது. நூற்றாண்டைக் கடந்து இடைவெளி இருந்தாலும் கூட இரண்டு விபத்திற்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கவே செய்கிறது.
டைட்டானிக் இடிபாடுகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற ஓஷன்கேட்டின் நீர்மூழ்கிக் கப்பலின் ஓட்டுநரின் மனைவி, 1912 டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்த ஜோடியின் கொள்ளுப்பேத்தியாவார். அதாவது ஓஷன்கேட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷின் மனைவி வெண்டி ரஷ், டைட்டானிக் கப்பலில் உயிரிழந்த இசிடோர் மற்றும் ஐடா ஸ்ட்ராஸின் கொள்ளுப்பேத்தி ஆவர்.
மேலும், டைட்டானிக் கப்பலை வடிவமைத்த தாமஸ் ஆண்ட்ரூஸ் கப்பல் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல டைட்டன் நீர் மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பாளர்களில் ஒருவான நிறுவனத்தின் சிஇஓ ஸ்டாக்டன் ரஷும் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டதையும் நெட்டிசன்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications