என்ன சொல்கிறது 25வது சட்டத் திருத்தம்.. டிரம்ப்புக்கு தண்டனை கிடைக்குமா?.. அதிர வைக்கும் அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்பே வன்முறைக்கு வித்திட்டார் எனும் விவகாரத்தில் 25 ஆவது சட்ட திருத்தம் என்ன சொல்கிறது? இந்த சட்டத்தை கையில் எடுக்க பலர் கோரிக்கையும் விடுத்து வருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் சர்ச்சைக்குரிய வகையில் செய்து வருகிறார். இந்த நிலையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பெரும் பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.
பிடன் வெற்றியை ஏற்க டிரம்ப் மறுக்கிறார். அவர் மோசடி செய்ததாக கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் ஜோ பிடனை அங்கீகரித்து தேர்தல் சபை உறுப்பினர்கள் அளித்த வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கண்டனம்
அப்போது டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நாடாளுமன்ற பொருட்களை உடைத்து சூறையாடினர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு அதிபராக இருந்து கொண்டு ரவுடி போல் ஆதரவாளர்களை ஏவி விடுவதா என டிரம்பிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்துள்ளன.

பதவி நீக்கம்
இந்த நிலையில் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் டிரம்பை பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கு 25 ஆவது சட்ட பிரிவு வழி வகை செய்கிறது. 25 ஆவது சட்ட திருத்தம் 1967 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. இது 1963 ஆம் ஆண்டு கென்னடி படுகொலை செய்யப்பட்ட போது இந்த சட்டம் ஏற்கப்பட்டது.

சட்டத்தை பயன்படுத்த
இந்த சட்டத்தின்படி அதிபருக்கு அடுத்து வருவது குறித்து இயலாமை குறித்து விளக்குகிறது. இதில் உள்ள பிரிவு 4- ஒரு அதிபர் பணியை ஒழுங்காக செய்யாத போதும் அவராக பதவி விலகாத போதும் என்னென்ன செய்யலாம் என்பதை விளக்குகிறது. தனது பதவிக்கு சற்று பொருந்தாத செயல்களை செய்த டிரம்பிற்கு எதிராக அந்த சட்டத்தை பயன்படுத்தலாம் என பலர் தெரிவிக்கிறார்கள்.

துணை அதிபர்
டிரம்பிற்கு இன்னும் 14 நாட்களே உள்ளனர். ஜனவரி 20-ஆம் தேதி முதல் ஜோ பிடன் அதிபராக பதவியேற்கிறார். இந்த 25 ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தினால் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் டிரம்பின் அமைச்சரவையில் இருப்போரில் பெரும்பான்மையானவர்கள் டிரம்பை நீக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிப்பதை டிரம்ப் எதிர்த்தால் அதுகுறித்து நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும்.

அதிபராக செயல்படலாம்
இதை துணை அதிபர்தான் கையில் எடுக்க வேண்டும். ஒரு வேளை டிரம்ப் நீக்கப்பட்டு விட்டால் ஜோ பிடன் பதவியேற்கும் வரை மைக் பென்ஸ் அதிபராக தொடர்வார். அதாவது 3 இல் 2 பங்கு இரு அவை உறுப்பினர்களும் டிரம்பை ஓரங்கட்ட வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்துவதுதான் டிரம்பை வெளியேற்ற சிறந்த வழி என மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications