அமெரிக்கா- இந்தியா போட்ட முக்கியமான டீல்.. அப்போ ரஷ்யா, வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் என்னவாகும்?
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி இப்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு அவர் பல தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் எரிசக்தி குறித்த ஒப்பந்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், விவேக் ராமசாமி, எலான் மஸ்க் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசி வருகிறார்.

மோடி-டிரம்ப் சந்திப்பு
இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன. மேலும், பல முக்கிய ஒப்பந்தங்களும் கூட கையெழுத்தானது. அதில் குறிப்பாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி சார்ந்தும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மற்ற ஒப்பந்தங்களைக் காட்டிலும் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசும்போது அதிபர் டிரம்ப், "இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கும் முன்னணி நாடாக அமெரிக்கா இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இது தொடர்பாக ஒப்பந்தத்தைப் போட்டுள்ளோம். இது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க உதவும். மேலும், இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையராக அமெரிக்கா இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
ஒப்பந்தம் ஏன் முக்கியம்:
இந்தியா இதுவரை ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்தே அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. அதை மாற்றி அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழிவகை செய்யும்.
இது தொடர்பாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து சுமார் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இந்தியா இறக்குமதி செய்திருந்தது. இதை ஆண்டுக்கு 25 பில்லியன் டாலராக உயர்த்த ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த அதிகரித்த எரிசக்தி கொள்முதல் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பற்றாக்குறையையும் பாதிக்கும் என்பது முற்றிலும் சாத்தியம்" என்று மிஸ்ரி கூறினார்.
இந்தியா- அமெரிக்கா:
ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்து கணிசமான அளவுக்கு இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. தற்போது அமெரிக்கா இந்தியாவின் ஐந்தாவது பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக இருக்கிறது. அதேநேரம் எல்என்ஜி (liquefied natural gas) கேஸை பொறுத்தவரை அமெரிக்கா தான் இந்தியாவுக்கு அதிகபட்ச ஏற்றுமதி செய்கிறது.
கச்சா எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியே செய்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் சூப்பர் சில்லட் கேஸை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. இந்தியா தனது சூப்பர் சில்லட் கேஸ் தேவையில் சுமார் 50%க்கு மேல் இறக்குமதியே ச யெத் வருவது குறிப்பிடத்தக்கது.
செக் யாருக்கு:
கடந்தாண்டு ஜனவரி-நவம்பர் மாதங்களில், அமெரிக்காவிலிருந்து இந்தியா சுமார் 7.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது பார்க்க அதிகளவு போலத் தெரிந்தாலும், உண்மையில் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் இது வெறும் 3.2 சதவீதம் மட்டுமே. தற்போதைய சூழலில் ரஷ்யா தான் இந்தியாவின் முன்னணி எண்ணெய் சப்ளையராக உள்ளது. தொடர்ந்து ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அதன் பிறகு 5வது நாடாகவே அமெரிக்கா வருகிறது.
இருப்பினும், டிரம்ப்- மோடி இடையேயான ஒப்பந்தத்திற்குப் பிறகு இது அதிகரிக்கலாம். கடந்த மாதம் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூட, அமெரிக்காவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் அதிகரிக்கும் என்றே கூறியிருந்தார். ஒருவேளை அப்படி அதிகரித்தால் ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு குறையலாம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications