திடீரென அதிகரிக்கும் மூளையின் "சைஸ்.." இது எப்படி சாத்தியம்! வியந்து நிற்கும் ஆய்வாளர்கள்! வாவ் செம
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மனிதர்களின் மூளை அளவு அதிகரித்து வருவது உறுதியாகி உள்ளது. இது வயதான காலங்களில் ஏற்படும் பல வித நோய்ப் பாதிப்புகளைக் குறைக்குமாம்.
மனிதர்களுக்கு ரொம்பவே முக்கியமான உறுப்புகளில் ஒன்று என்றால் மூளை தான். யோசிப்பது, பேசுவது தொடங்கி நமது உடலில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் அடிப்படையாக இருப்பது மூளை தான்.

இப்படி மகத்தான ஒரு விஷயமாக இருக்கும் மனித மூளை குறித்து அறிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே ஆய்வு ஒன்றில் மனித மூளையின் அளவு அதிகரித்து வருவது தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் மூளை: இப்படி மூளை சைஸ் அதிகரிப்பு இளைய தலைமுறையினரின் டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஜாமா நரம்பியல் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் 55 மற்றும் 65 வயதுக்குட்பட்ட 3,000க்கும் மேற்பட்ட மூளையின் ஸ்கேன் படங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் தான் 1930களில் பிறந்தவர்களை விட 1970களில் பிறந்தவர்களின் மூளையின் சைஸ் 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.. மேலும் 1970களில் பிறந்தவர்களுக்கு முந்தைய தலைமுறையில் பிறந்தவர்களைக் காட்டிலும் white matter 8 சதவீதமும் gray matter 15 சதவீதமும் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை தகவல்களை பிராசஸ் செய்யவும், எழுதவும் படிக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் ஹிப்போகேம்பஸ்: மேலும், கற்றல் நினைவாற்றலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹிப்போகேம்பஸ், முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில் அளவு 5.7 சதவீதம் விரிவடைந்துள்ளது. உயரம், வயது மற்றும் பாலினம் போன்றவற்றை தாண்டியும் மூளை பெரிதாகி உள்ளது ஆய்வில் தெளிவாகத் தெரிகிறது.
கலிஃபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சார்லஸ் டிகார்லி தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மூளையின் சைஸ் என்பது நீண்டகால மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்றே தெரிவதாக சார்லஸ் டிகார்லி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மூளையின் அளவை நிர்ணயிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது, அதேநேரம் மூளையின் சைஸ் உடல்நலம், சமூகம், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்றவற்றிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்றார்.
டிமென்ஷியா பாதிப்புகள் குறையும்: மூளையின் அளவு அதிகரிப்பதால் வயதான காலங்களில் வரும் நோய் குறைவதாகவும் ஆய்வாளர்கள் கூறினார், இதனால் வயது மூப்பு காலங்களில் ஏற்படும் டிமென்ஷியா பாதிப்புகள் குறையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வயதான காலத்தில் ஏற்படும் பல வித பாதிப்புகளும் மூளை சைஸ் அதிகரிப்பதால் கணிசமாகக் குறையலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
டிமென்ஷியா பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். வயதான மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே டிமென்ஷியா பாதிப்புகள் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறி வந்தனர். இதற்கு காரணம் மூளையின் சைஸ் அதிகரிப்பது தான் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications