சூறாவளி பிரச்சாரத்தில் டிரம்ப்.. ஆனா அவரது மனைவி மெலனியா மட்டும் மிஸ்ஸிங்.. ஓ விஷயம் அப்படி போகுதா
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.. அங்கு பைடன் மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தல்களில் டிரம்பிற்கு பக்க பலமாக நின்று மெலனியா பிரச்சாரம் செய்த போதிலும், இந்த தேர்தலில் பிரச்சாரத்தில் அவரை பார்க்கவே முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்.. மெலனியா என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடனும் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் களமிறங்குகிறார்கள்.

மெலனியா எங்கே: இந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த தேர்தல் பிரச்சாரங்களில் டிரம்பிற்காக அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். ஆனால், இந்த முறை அவரை பிரச்சாரத்தில் பார்க்கவே முடியவில்லை. பிரச்சாரம் மட்டுமின்றி டிரம்ப் வென்றால் கூட அவரது மனைவி மெலனியாவை பொதுவெளியில் அதிகம் பார்க்கவே முடியாதாம். இதற்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது டிரம்புடன் மெலனியா டிரம்ப் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளதாக அங்குள்ள பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "மெலானியா தனது கணவர் டிரம்ப் உடன் ஒரு டீல் போட்டுள்ளார். அதாவது டிரம்ப் தேர்தலில் வென்று அதிபரானாலும் மெலனியா அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருக்கத் தேவையில்லை என்பதே அந்த ஒப்பந்தம்" என்று கூறியுள்ளார். மேலும், இப்போது அவர் தனது மகனுடன் இருப்பதாலேயே பெரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.
ஒப்பந்தம்: மெலனியா டிரம்ப் தனது மகன் பரோன் டிரம்புடன் அதிக நேரம் செலவிட விரும்புவதால் இந்த ஒப்பந்தத்தைப் போட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 18 வயதான பரோன் டிரம்ப் விரைவில் நியூயார்க் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர உள்ளார். பரோன் டிரம்ப் தனியாகப் பல்கலைக்கழகம் செல்லவுள்ளதால் அவருக்கு உதவவே மெலனியா டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
என்ன காரணம்: இது குறித்து மேலும் கூறுகையில், "வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் தனது மகனுடன் இருக்க வேண்டும் என மெலனியா விரும்புகிறார். பரோன் இதற்கு முன் இதுபோல தனியாக இருந்ததே இல்லை. மேலும், கல்லூரி சூழலும் புதிதாக இருக்கும். அவர் பள்ளியில் சேரும் நியூயார்க் நகரம் ஜனநாயக கட்சியினர் அதிகம் இருக்கும் நகரம். இவர் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மகனாக இருப்பதால் கூடுதல் மன அழுத்தம் இருக்கும். இதன் காரணமாகவே மெலனியா தனது மகனுடன் இருக்க விரும்புகிறார்.
கவலை: மேலும், டிரம்ப் ஒரு வேலை தேர்தலில் வென்று அதிபரானால் அவரது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். அதன்படி பரோன் டிரம்பிற்கும் பாதுகாப்பு வழங்கப்படும். இதனால் கல்லூரியில் அவரை அந்நியப்படுத்திவிடுவார்களோ என்ற கவலையும் மெலனியாவுக்கு இருக்கிறது.
மெலனியா தனது மகன் விஷயத்தில் எப்போதும் ரொம்பவே அலர்ட்டாக இருப்பார். தனது மகனைப் பாதுகாப்பாகவும் சவுகரியமாகவும் வைத்துக் கொள்வதிலேயே முன்னுரிமை அளிப்பார். இதன் காரணமாகவே அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் அவரை தள்ளியே வைத்து இருக்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications