ரூ.41 கோடி மாளிகையில் அனாதையாக இறந்து கிடந்த இந்திய குடும்பம்.. அங்கே என்ன நடந்தது! பகீர் பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவில் கோடீஸ்வர இந்திய வம்சாவளி தம்பதியினர் சடலங்களாகக் கண்டறியப்பட்ட சம்பவத்தில் இப்போது பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வந்த கோடீஸ்வர இந்திய வம்சாவளி தம்பதி ராகேஷ் கமல் (57) மற்றும் அவரது மனைவி டீனா கமல் (54). இந்தத் தம்பதிக்கு அரியன்னா என்ற மகள் இருந்தார். 18 வயதான இந்த அரியன்னா அங்கே உள்ள கல்லூரியில் படித்தது வந்தார்.

இந்த குடும்பமே அவர்களுக்குச் சொந்தமான சொகுசு பங்களாவில் கடந்த வாரம் சடலங்களாகக் கண்டறியப்பட்டன. இந்தச் சம்பவம் அமெரிக்காவை அதிர வைப்பதாக இருந்தது.
41 கோடி மாளிகை: அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பங்களாவின் மதிப்பு மட்டும் 5 மில்லியன் டாலர், அதாவது 41 கோடி ரூபாய் மதிப்புடையது. இவர்கள் கடந்த டிச. 28ஆம் தேதி சடலமாகக் கண்டறியப்பட்டனர். அதில் ராகேஷ் கமல் உடலுக்கு அருகே துப்பாக்கி ஒன்றும் கண்டறியப்பட்டது. இது குடும்ப வன்முறையால் நடந்த கொலை அல்லது தற்கொலை சம்பவமாக இருக்கும் என முதலில் கூறப்பட்டது.
வெளியாட்கள் உள்ளே நுழைந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து இப்போது பல கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது: இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், "டீனாவும் அவரது மகள் அரியான்னாவும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராகேஷ் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். அதனால் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை இன்னும் சில வாரங்களில் எங்கள் கைகளுக்கு வரும். அத்துடன் விசாரணை முடிந்துவிடும் என நம்புகிறோம்" என்றனர்.

மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அங்கே கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியில் தடயவியல் மற்றும் பாலிஸ்டிக்ஸ் சோதனை நடத்தினோம்.. ராகேஷ் உடல் அருகே கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி .40 காலிபர் துப்பாக்கி. அவர்கள் உடலில் இருந்த குண்டுகள். இந்த துப்பாக்கியில் இருந்து வந்துள்ளது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அந்த துப்பாக்கி ராகேஷ் பெயரில் பதிவு செய்யப்படவில்லை. உரிமம் இல்லாமல் வைத்திருந்த துப்பாக்கியாகும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மாளிகை: கமல் குடும்பத்தினர் $5.45 மில்லியன், அதாவது 41 கோடி ரூபாய் மதிப்புடைய மாளிகையில் சடலமாகக் கண்டறியப்பட்டனர். 11 பெட் ரூம் கொண்ட இந்த 19,000 சதுர அடி எஸ்டேட்டை கடந்த 2019இல் கமல் குடும்பத்தினர் 4 மில்லியன் கொடுத்து வாங்கி இருந்தனர். ஆனால், கடன் பிரச்சினையால் ஒரு வருடத்திற்கு முன்பு இந்த மாளிகையை அவர்கள் வாங்கிய விலையை விடக் குறைவாக $3 மில்லியனுக்கு விற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்சினை: ராகேஷ் கமல்- டீனா கமல் தம்பதியினர் இணைந்து எடுநோவா என்ற கல்வி நிறுவனத்தைக் கடந்த 2016இல் தொடங்கினர். இருப்பினும், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இதில் கடும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 2021இல் அவர்கள் அந்த நிறுவனம் திவால் ஆவதாக நோட்டீஸ் அனுப்பினர். இருப்பினும், திவால் நோட்டீசில் போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அதை நிராகரித்தது. இதனால் அவர்கள் சொத்துகளை விற்று கடனை திருப்பி அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த கடன் தொல்லையால் அவர்கள் இந்த மோசமான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த தம்பதியின் மகள் அரியன்னா மிடில்பரி என்ற டாப் தனியார் கல்லூரியில் நரம்பியல் பயின்று வந்தார். அவரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேலும், இவர்கள் இருந்த பகுதியில் கடந்த 2020க்கு பிறகு நடக்கும் முதல் கொலை- தற்கொலை சம்பவம் இதுவாகும்.












Click it and Unblock the Notifications