வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு! 'ஆபரேஷன் அல்லீஸ் வெல்கம்' திட்டத்தால் பதறும் அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட இவரை, சக காவலர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவரை கைது செய்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர் ஆப்கான் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் ஆபரேஷன் அல்லீஸ் வெல்கம் எனும் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் நுழைந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில், வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள ஃபேராகட் வெஸ்ட் மெட்ரோ நிலையத்தில் நடந்திருக்கிறது. இங்கு வழக்கமாக தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்படி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான் சம்பவம் நடந்திருக்கிறது.

மெட்ரோ ரயில் நிலையத்தில், முதலில் ஒரு பெண் காவலரை தாக்கியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கி, அவரது தலையிலும், மார்பிலும் சுட்டு இருக்கிறார். இதைப் பார்த்து சம்பவ இடத்தை நோக்கி வந்த மற்றொரு காவலரையும் சரமாரியாக சுட்டிருக்கிறார். மூன்றாவது காவலர் தாக்குதல் நடத்திய நபரை சுட்டு வீழ்த்தியுள்ளார். மூவரும் கவலைக்கிடமான நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிற கோணத்தில் இந்த வழக்கை அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லக்கன்வால் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 'ஆபரேஷன் அல்லீஸ் வெல்கம்' திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கிறார். இவரது விசா காலாவதி ஆன பின்னரும் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி இருக்கிறார்.
அமெரிக்க படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறிய நிலையில், அந்நாட்டை தாலிபான்கள் முழ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. இதனையடுத்து, ஆப்கானிலிருந்து வெளியேறுபவர்களுக்கு தற்காலிக விசா வழங்கும் விதமாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'ஆபரேஷன் அல்லீஸ் வெல்கம்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்குள் ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகள் தற்காலிகமாக தங்கிக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 90,000 ஆப்கானியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். இவர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் மேலும் அமெரிக்காவில் தங்கிக்கொள்ளும் விதமாக, கால நீட்டிப்பு வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இந்த காலங்களில் அமெரிக்காவில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்தாமல் அந்நாட்டுக்கு பயன்படும் ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கிரீன் கார்டுக்கும், நிரந்தர குடியுரிமைக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால், தாக்குதல் நடத்தியவர் இப்படியான என எந்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, 'ஆபரேஷன் அல்லீஸ் வெல்கம்' திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற அமெரிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள், இதற்காக ஜோ பைடனை குற்றம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications