ஈரான் ஜெயிலிலிருந்து.. இந்த 8 பெண்களை ரிலீஸ் செய்யனும்! டிரம்ப் போட்ட லிஸ்ட்! யார் இவர்கள்?
வாஷிங்டன்: ஈரான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களில் 8 பெண்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். யார் இந்த பெண்கள்? டிரம்ப் இப்படி சொல்ல என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
டிரம்ப் லிஸ்ட் போட்ட 8 பெண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், டிரம்ப் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

- பிதா ஹெம்மாதி
- டயானா தாஹெராபாடி
- மஹ்பூபே ஷபானி
- என்சிஹ் நெஜாதி
- கோல்நாஸ் நராகி
- வீனஸ் ஹுசைன் நெஜாத்
- கசல் கலந்தாரி
- பனா மொவாஹெடி
டிரம்ப் வலியுறுத்தல்
இவர்கள்தான் டிரம்ப் குறிப்பிட்ட 8 பெண்கள். இவர்களை விடுவிக்க வேண்டும் என்று ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வருங்காலப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றும், அந்தப் பெண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் அவர் ஈரான் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஜனவரி மாதம் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். ஈரான் வரலாற்றிலேயே 1979-ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அரசு எதிர்ப்பு எழுச்சியாக ஜனவரி மாத போராட்டம் பார்க்கப்படுகிறது.
யார் இவர்கள்
டிரம்ப் லிஸ்ட் போட்ட 8 பேரில், பிதா ஹெம்மாதி என்பவர் ஜனவரி போராட்டத்தின் போது கணவருடன் கைது செய்யப்பட்டவர். வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டயானா தாஹெராபாடி, 16 வயது சிறுமி. இவரும் ஜனவரி மாதப் போராட்டங்களில் பங்கேற்றதாகக் கைது செய்யப்பட்டவர்.
33 வயது மதிக்கத்தக்க மஹ்பூபே ஷபானி, போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டவர்.
ஜனவரி போராட்டம்
என்சிஹ் நெஜாதி என்பவர், குர்திஷ் பெண்கள் உரிமை ஆர்வலர். இவருக்கு ஒரு சிறு குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது. 37 வயதாகும் கோல்நாஸ் நராகி அவசர சிகிச்சை மருத்துவர் ஆவர். வீனஸ் ஹுசைன் நெஜாத் என்பவர் பணியிடத்தில் வைத்துப் பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர். மீதமுள்ள கசல் கலந்தாரி, பனா மொவாஹெடி ஆகியோர் பற்றி, விவரங்கள் பொதுவெளியில் பெரியதாக இல்லை.
மனித உரிமை அமைப்புகள்
இந்த பெண்களின் விபரங்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலமாகவே கிடைத்துள்ளன. ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக இவர்களது அடையாளத்தையோ அல்லது குற்றச்சாட்டுகளையோ முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. இவர்களில் சிலர் தொலைக்காட்சியில் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
தூக்கு தண்டனை
இந்த ஆண்டு தொடக்கத்தில், ஈரானில் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, 50,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. விசாரணைகள் அவசரமாகவும், நேர்மையற்ற முறையிலும் நடத்தப்பட்டு தண்டனையளிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்த பின்னணியில்தான் டிரம்ப் மேற்குறிப்பிட்ட 8 பேரை விடுவிக்க கோரிக்கை வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications