அமெரிக்க பால விபத்து நடந்து 5 நாள் ஆச்சு.. இன்னும் இந்தியர்கள் கப்பலிலேயே இருப்பது ஏன்.. பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பால விபத்து நடந்து 5 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், இன்னும் இந்திய பணியாளர்கள் கப்பலில் இருந்து வெளியேறவில்லை. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் கடந்த வாரம் பால்டிமோர் பாலத்தில் கப்பல் ஒன்று மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்தக் கப்பல் விபத்து தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது விபத்து நடந்து 5 நாட்கள் ஆகிவிட்ட போதிலும், அந்த கப்பலில் உள்ள 20 இந்தியப் பணியாளர்களும் இன்னும் அதே கப்பலில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
என்ன காரணம்: கப்பல் விபத்து குறித்தும் கப்பலில் ஏற்பட்ட கோளாறு குறித்தும் அவர்கள் அதிகாரிகளுக்கு விளக்கம் தந்து வருகிறார்களாம். மேலும், கப்பலில் மேற்கொள்ள வேண்டிய தினசரி பராமரிப்பு பணிகளையும் அவர்கள் கவனித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்து 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், கப்பலில் இருக்கும் இந்தியப் பணியாளர்கள் எப்போது வெளியே வருவார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். விபத்தால் பாலம் முழுமையாகச் சேதமடைந்துள்ள நிலையில், அந்த சேதம் முழுமையாக அகற்றப்படும் வரை அந்த குழு அங்கேயே தான் இருப்பார்களாம். இதனால் இன்னும் சில நாட்கள் அவர்கள் கப்பலிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியர்கள்: டாலி என்ற அந்த கப்பல் 4,700 கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது திடீரென பவரை இழந்த அந்த கப்பல் திசை மாறி பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தில் மோதியது. இதனால் அந்த பாலம் அப்படியே முழுமையாக இடிந்து விழுந்தது. இந்த விபத்து நடந்து சில மணி நேரம் கழித்தே உள்ளே இருந்த அனைவரும் இந்தியப் பணியாளர்கள் என்பது தெரிய வந்தது.
என்ன காரணம்: இதையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் இதில் தலையிட்டது. கப்பலில் இருப்போரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ள வெளியுறவுத் துறை, அவர்களை அழைத்து வரும் முயற்சியிலும் இறங்கியது. இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் பாலத்தின் பகுதிகளை முழுமையாக அகற்றும் வரை அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை.
இருப்பினும், அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கு மட்டும் விபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் அருகே உள்ள பால்டிமோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்குச் சிகிச்சை தரப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை முடிந்த உடன் அவரும் கப்பலுக்குத் திரும்பிவிட்டார். இதை வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
முடக்கம்: இந்த விபத்தால் அமெரிக்காவில் பிஸியான துறைமுகங்களில் ஒன்றான பால்டிமோர் மேம்பாலம் முடங்கிப் போய் இருக்கிறது. அங்கே கப்பல் போக்குவரத்து எதுவும் நடக்கவில்லை. குப்பைகளை அகற்றி, கப்பலை மீண்டும் இயக்க சில வாரங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. கப்பலில் பணியாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் இருக்கிறது.
ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருளும் இருப்பதால் பால்டிமோர் துறைமுகம் திறக்கப்படும் வரை அவர்கள் அங்கேயே இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இடிபாடுகள் எப்போது முழுமையாக அகற்றப்படும்.. கப்பல் மீண்டும் எப்போது இயங்க தொடங்கும் என்பதற்கான துல்லியமான தகவல்கள் இல்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
பாராட்டு: கப்பலில் இருந்த பிரச்சினையைக் கண்டறிந்த பணியாளர்கள் உரிய நேரத்தில் உள்ளூர் அதிகாரிகளுக்கு எஸ்ஒஎஸ் மெசேஜை அனுப்பி உள்ளனர். இதன் காரணமாக உள்ளூர் அதிகாரிகள் முன்கூட்டியே அந்த பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர். இதனால் பாதிப்புகள் குறைந்துள்ளன.












Click it and Unblock the Notifications