சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் பதவிநீக்கம்.. "அந்த" வார்த்தையை நோட் பண்ணீங்கள! முழு பின்னணி
வாஷிங்டன்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்ட நிலையில், அவர் எதற்காக இந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்து சில முக்கிய தகவல்களை வெளியாகியுள்ளது.
இப்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி தான் ஏஐ கருவிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே சொல்லலாம்.
சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சாட் ஜிபிடி போன்ற ஏஐ கருவிகள் நிச்சயம் மனிதக் குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

சாம் ஆல்ட்மேன்: சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் டெக் உலகை முற்றிலுமாக புரட்டிப் போட்ட ஒரு ஏஐ கருவி என்றால் அது சாட்ஜிபிடி தான். அதன் முகமாக இத்தனை காலமாக இருந்தவர் சாம் ஆல்ட்மேன். இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் நேரடியாகச் சென்று ஏஐ எந்தளவுக்குப் பலன் தரும்.. அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து சாம் ஆல்ட்மேன் விளக்கியுள்ளார்.
இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த ஓபன் ஏஐ நிறுவனம் தான் சாட்ஜிபிடியை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சாம் ஆல்ட்மேன் ஏன் சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
என்ன காரணம்: நீண்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இயக்குநர் குழுவுக்கு அவர் அளிக்கும் தகவல்களை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இல்லை என்பதே குற்றச்சாட்டாகும். வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதில் தடையாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஓபன் ஏஐ நிறுவனத்தின் புதிய சிஇஓவாக மீரா முராட்டி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஓபன் ஏஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இயக்குநர் குழுவுக்கு அவர் அளிக்கும் தகவல்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் இல்லை.. இதனால் அவரால் திறம்பட இயங்க முடிவதில்லை என்பதை இயக்குநர் குழு முடிவு செய்தது. இனிமேலும் ஓபன் ஏஐ நிறுவனத்தை அவர் திறம்பட இயக்குவார் என்பதில் நம்பிக்கை இல்லை" என்று கூறியுள்ளார்.
ஏன் முக்கியம்: ஏஐ உலகில் சாம் ஆல்ட்மேன் முக்கிய நபராக இருந்து வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு முதலே ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் ஆல்ட்மேன் இருந்து வந்துள்ளார். ஏஐ என்பது அனைத்து தரப்பினருக்கும் நன்மையைப் பயிர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றே அவர் தொடர்ந்து கூறி வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த வார்த்தை முக்கியம்: சாம் ஆல்ட்மேன் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என்று ஓபன் ஏஐ இயக்குநர் குழு கூறியுள்ளது. இது மிக பெரிய குற்றச்சாட்டு. இருந்த போதிலும் இது குறித்து தெளிவான தகவல்களை இயக்குநர் குழு வெளியிடவில்லை.
சாம் ஆல்ட்மேன் பதவிநீக்கம் என்பது யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை ஓபன் ஏஐ நிறுவனம் எப்படிக் கையாள்கிறது என்பது ரொம்பவே முக்கியம். இல்லையென்றால் அது ஓபன் ஏஐ நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும்.












Click it and Unblock the Notifications