போர் என்றாலே பிடிக்காது.. அதுதான் டிரம்ப்.! இந்தியா-பாக். மோதலை முடிவுக்கு கொண்டு வருதால் என்ன லாபம்
வாஷிங்டன்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இந்தச் சண்டையைச் சமாதானம் செய்து வைத்ததே நான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதை இந்தியா உறுதி செய்யவில்லை என்றாலும் கூட டிரம்ப் கடந்த காலங்களில் எப்போதுமே போருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் முதலில் இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த அதற்கு இந்தியாவும் தக்கப் பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அடி விழுந்தது. இதற்கிடையே இந்தச் சண்டை இப்போது முடிவுக்கு வந்தது.

அதிபர் டிரம்ப்
இந்த மோதலைச் சமாதானம் செய்து வைத்ததே நான்தான் என அமெரிக்க டிரம்ப் கூறி வருகிறார். டிரம்ப் தரப்பு சமாதானம் செய்ததை இந்தியா உறுதி செய்யவில்லை என்றாலும் கூட டிரம்ப் கடந்த காலங்களில் எப்போதுமே போருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். இது குறித்து நாம் பார்க்கலாம். டிரம்ப் போருக்கு எதிராகப் பேசுவது முதல்முறை இல்லை.. கடந்த காலங்களிலும் போருக்கு எதிராகப் பல சமயங்களில் பேசியுள்ளார்.
பக்காவான பிஸ்னஸ்மேன்
டிரம்ப் அதிபர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பக்காவான பிஸ்னஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு சமயமும் போர் வெடித்தால் மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்படுவதாக டிரம்ப் விமர்சித்துள்ளார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல்களுக்குச் செலவிடப்படும் டிரில்லியன் டாலர்களை உள்கட்டமைப்பு அல்லது வரி குறைப்புக்கள் பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யலாம் என்பது அவரது வாதம்!
மேலும், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டும் என்பதே அவர் ஸ்டைல். இதன் காரணமாகவே இதுவரை எந்தவொரு அமெரிக்க அதிபரும் செய்யாத வகையில் அவர் முதல் முறை அதிபராக இருந்த 2016-2020 காலகட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை கூட நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். அவரது காலத்தில் பல முக்கிய அமைதி முன்னெடுப்பை எடுத்தார். வெளிநாடுகளில் இருந்த அமெரிக்க வீரக்களையும் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.
மோதல் இருக்கக்கூடாது
ஒரு பிஸ்னஸ் நன்றாக நடக்க மோதல் எதுவும் இல்லாமல் அமைதியான ஒரு சூழல் இருக்க வேண்டும். தேவையற்ற குழப்பம், மோதல் இருக்கக்கூடாது. இந்தியா பாகிஸ்தான் மோதலால் அமெரிக்காவுக்கு என்ன என்று நீங்கள் கேட்கலாம். இப்போது உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே ஒன்றுடன் ஒன்று கனெக்ட்டாக இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் மோதல் என்பது சர்வதேச பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அமெரிக்காவிலும் இதன் தாக்கம் உணரப்படும். இதன் காரணமாகவே டிரம்ப் தொடக்கம் முதல் மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயன்றார்.
இமேஜ் முக்கியம்
எல்லாவற்றையும் விட மற்றொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. அதாவது கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தன்னை போருக்கு எதிராக நபரைப் போலவே முன்னிறுத்தினார். தான் அதிபராக ஆட்சியைப் பிடித்தால் உடனடியாக எல்லாப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று எல்லாம் கூறினார். ஆனால், அவரால் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. நீண்ட காலம் போராடியும் முடிவுக்கு வரவில்லை.
இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் டிரம்ப் அதிபராகப் பதவியேற்கும் போது முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது சில காலம் வரை மட்டுமே நீடித்தது. மீண்டும் போரை இரு தரப்பும் ஆரம்பித்துவிட்டன. இதனால் அமெரிக்க மக்களிடையே டிரம்ப்பின் இமேஜ் பிரச்சினைக்குள்ளானது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் என்றாலும் அங்கு மிட் டேர்ம் தேர்தல் என ஒன்று நடக்கும். அதில் வெல்லவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் பலத்தை இழக்கக்கூடும். அதன் பிறகு அதிபர் நினைக்கும் காரியங்களை எல்லாம் ஈஸியாக செய்ய முடியாது.
ஏற்கனவே டிரம்ப்பால் உக்ரைன் மற்றும் இஸ்ரேல் போர்களை நிறுத்த முடியாத நிலையில், அவருக்கும் ஒரு இமேஜ் பூஸ்டர் தேவைப்பட்டது. இதன் காரணமாகவே டிரம்ப் தொடக்கம் முதலே இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி வருகிறார்.
அதிபர் டிரம்ப்
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் போர் என்பது பொருளாதாரத்திற்கு நல்லது இல்லை.. மேலும், டிரம்ப்பின் இமேஜை பாதுகாக்கவும் தேவை இருந்தது. இதன் காரணமாகவே டிரம்ப் எப்போதும் போருக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications