'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்!
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21ம் தேதியான இன்று முதல் செப்டம்பர் 27 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை மோடியின் சுற்றுப் பயணம் நிகழ உள்ளது. இதில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நாளை 'ஹவுடி மோடி' (howdy modi) நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்முறை கால்பந்து மைதானங்களில் ஒன்றான என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் "ஹவுடி, மோடி" நிகழ்வு நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு அந்த நிகழ்ச்சி துவங்கும். இந்த நிகழ்வில் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியுடன், டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மறுபுறம், இந்த நிகழ்ச்சி, அரசியல் அடிப்படையிலும் டொனால்ட் ட்ரம்புக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு, அமெரிக்கத் தேர்தல் கள நிலவரப்படி, அமெரிக்கவாழ் இந்தியர்களில் பெரும்பாலானோர் டிரம்பிற்கு வாக்களிக்கவில்லை. இது லேசுப்பட்ட விஷயம் இல்லை.
தொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை!
அமெரிக்கவாழ் இந்தியர்கள்
அமெரிக்க சமுதாய கணக்கெடுப்பு (2017 இன் படி), அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 1.3 சதவிகிதம். மக்கள்தொகை அடிப்படையில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான (7 லட்சம்) இந்தியர்கள் கலிபோர்னியாவில் வாழ்கின்றனர். கலிபோர்னியாவைத் தொடர்ந்து நியூயார்க்கில் 3.7 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து நியூ ஜெர்சி (3.7 லட்சம்), டெக்சாஸ் (3.5 லட்சம்), இல்லினாய்ஸ் (2.3 லட்சம்), புளோரிடா (1.5 லட்சம்) உள்ளனர்.
16 மாநிலங்களில் ஆதிக்கம்
அமெரிக்காவின் 50 மாகாணங்களில், 16 மாகாணங்களில் இந்தியர்கள் அம்மாநில மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். சதவீதம் வாரியாக பார்த்தால், நியூ ஜெர்சியில் 4.1 சதவீத இந்தியர்கள் உள்ளனர். இந்தியர்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் 16 மாநிலங்களில், 10 மாநிலங்களின் குடிமக்கள் டொனால்ட் டிரம்பின் எதிராளியாக களமிறங்கிய ஹிலாரி கிளிண்டனுக்கு 2016 அதிபர் தேர்தலில் அதிகமாக வாக்களித்தனர், 6 மாநிலங்கள் மட்டுமே டொனால்ட் டிரம்பை ஆதரித்தன.
ஹிலாரிக்கு அதிக ஆதரவு
யுபிஐ / சிவோட்டரின் ஆய்வில் 57.6 சதவீத இந்தியர்கள் ஹிலாரி கிளிண்டன் அதிபராக வாக்களித்ததாகவும், சுமார் 29 சதவீதம் பேர் டிரம்பிற்கு வாக்களித்ததாகவும் கண்டறியப்பட்டது. மீதமுள்ள சிறுபான்மையினருடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் ஹிலாரிக்கு அளித்த ஆதரவு ஒப்பீட்டளவில் குறைவுதான். ஏனெனில், அமெரிக்காவில் வாழும் கிட்டத்தட்ட 90 சதவீத ஆப்பிரிக்க வம்சாவளியினர் கிளின்டனை ஆதரித்தனர். கிளின்டனுக்கு 75.3 சதவீத ஹிஸ்பானிக் மற்றும் 72 சதவீத ஆசிய வாக்காளர்கள் ஆதரவு கிடைத்தது. அவர்களுடன் ஒப்பிட்டால், டிரம்ப்புக்கு எதிரான ஆக்ரோஷ மனநிலை இந்தியர்களிடம் இல்லை.
மாகாணங்கள்
நியூ ஜெர்சியில், அமெரிக்க இந்தியர்களில் 53.7 சதவீதம் பேர் ஹிலாரி கிளின்டனை ஆதரித்தனர், 25.2 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர். 16 சதவீதம் பேர் மற்ற வேட்பாளர்களை ஆதரித்தனர், 4.9 சதவீதம் பேர் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு தரவில்லை. டிரம்பும் மோடியும் சந்திக்கும் டெக்சாஸில் கூட இந்தியர்கள் கடந்த தேர்தலில் பெரும்பாலும் (62.5 சதவீதம்) ஹிலாரியைத்தான் ஆதரித்தனர், 18.8 சதவீதம் பேர் டிரம்பையும் 18.7 சதவீதம் பேர் மற்றவர்களையும் ஆதரித்தனர்.
ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள்
இந்திய வாக்காளர்கள் பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சிக்கு குறைந்த ஆதரவுதான் தருகிறார்கள். "இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வணிக மற்றும் ராஜதந்திர விஷயங்களில் வளர்ச்சிக்கும் மோடிக்கும் டிரம்பிற்கும் இடையிலான சந்திப்பு மிகவும் முக்கியமானது, ஆனால் அங்கு வாக்காளர்கள் மனநிலையை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவுதான். இதற்கு காரணம், இந்தியாவைப் போலல்லாமல், அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்கள் கட்சி விஷயத்தில் அடிக்கடி முடிவுகளை மாற்றுவதில்லை" என்கிறார் பாலிசி ஆய்வு மையத்தின் நீலஞ்சன் சர்க்கார் .
மாறுவார்கள்
டிரம்ப் மற்றும் மோடியின் இந்த சந்திப்பு இந்திய வாக்காளர்களை கவர்ந்திழுப்பதில் வெற்றிகரமாக இருக்கும் என்று சிவோட்டர் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் நம்புகிறார். "அமெரிக்காவில் வாழும் இந்திய வாக்காளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் அல்ல என்பது எனது கருத்து. சரி, அவர்கள் ஜனநாயகக் கட்சியை அதிக அளவில் ஆதரித்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரே கட்சியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை" என்று தேஷ்முக் கூறுகிறார்.
ட்ரம்ப்புக்கு ஆதாயம்
இந்திய சமூகத்தில் ஜனநாயகக் கட்சியினரின் புகழ் குறைந்து வருவது குறித்தும் தேஷ்முக் இப்படி சொல்கிறார், "ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மோடி நடவடிக்கைகளை விமர்சிக்கிறார்கள், காஷ்மீர் குறித்த அவர்களின் சமீபத்திய அறிக்கைகளை, இங்குள்ள இந்திய சமூகம் ரசிக்கவில்லை. மோடி மற்றும் டிரம்பின் இந்த சந்திப்பு பிரிட்டனில் நடந்ததைப் போலவே இந்திய வாக்காளர்களின் அணுகுமுறையை மாற்ற முடியும்" என்கிறார்.