"இரும்பிலே ஓர் இருதயம் முளைத்ததோ.." நோயாளிக்கு செயற்கை ஹார்ட்! இது எப்படி சாத்தியம்.. பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு உலகிலேயே முதல்முறையாக டைட்டானியம் மூலம் செய்யப்பட்ட இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை இதயம் தான் அவரது உடல் முழுக்க ரத்தத்தை அனுப்பி இருக்கிறது. இது மருத்துவ உலகில் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், மனிதக் குலத்தில் மகத்தான பாய்ச்சலாக இதை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நம்மில் பலரும் ஹாலிவுட்டில் வெளியான அயர்ன் மேன் படத்தைப் பார்த்து இருப்போம். அல்லது அது குறித்து கேள்விப்பட்டிருப்போம். அதில் பல்லேடியம் மூலம் இயங்கும் ஆர்க் ரியாக்டர் தான் அயர்ன் மேனை உயிருடன் வைத்திருக்கும்.

செயற்கை இதயம்: கிட்டத்தட்ட இதேபோல ஒரு சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. 58 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு டைட்டானியம் மூலம் செய்யப்பட்ட இதயத்தைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் உலகிலேயே முதல்முறையாக டைட்டானியம் மூலம் செய்யப்பட்ட செயற்கை இதயத்தைப் பெற்ற நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அங்குள்ள பிரபல BiVACOR என்ற நிறுவனம் தான் இந்த கருவியை உருவாக்கியுள்ளது. ஒருவருக்கு இதயம் செயலிழக்கும் போது இதயத்தின் செயல்பாட்டை முழுமையாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு டைட்டானியம் ரத்த-பம்பர் தான் இது.. இதை அவர்கள் Total Artificial Heart எனக் குறிப்பிடுகிறார்கள். இது மனிதர்களின் இதயத்தில் இருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கிறது.
மாறுபட்ட கருவி: அதேநேரம் மனிதர்களுக்குச் செயற்கை இதயம் உருவாக்கும் முதல் முயற்சி இது இல்லை. ஏற்கனவே பல நிறுவனங்கள் அதுபோல செயற்கையான முறையில் இதயத்தை உருவாக்க முயன்றுள்ளனர். இருப்பினும், அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்த கருவிகளில் இருந்து இவர்கள் உருவாக்கிய கருவி மாறுபட்டதாக இருக்கிறது.
அந்த கருவிகளை போல் இதயத் துடிப்பை மீண்டும் உருவாக்க முயன்றனர். ஆனால், இந்த கருவி இதயம் துடிப்பது போலச் செயல்படாது. அதற்குப் பதிலாக, இது நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்யக் காந்த லெவிட்டிங் ரோட்டரைப் பயன்படுத்துகிறது. இந்த புதுமையான வடிவமைப்பே இதை அதிக நாட்கள் பலன் தரும் கச்சிதமான ஒரு சாதனமாக மாற்றுகிறது.
எட்டு நாட்கள்: டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் உள்ள பேய்லர் செயின்ட் லூக்கின் மருத்துவ மையத்தில் தான் அந்த அமெரிக்கருக்கு இந்த கருவியைப் பொருத்தியுள்ளனர். இதய செயலிழப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இது நிரந்தர தீர்வு இல்லை. தற்காலிக ஒன்று தான். அவருக்கு தானம் மூலம் கிடைத்த மாற்று இதயம் பொருத்தப்பட்டது. இருப்பினும் இடைப்பட்ட 8 நாட்கள் அவர் உயிருடன் இருக்க இந்த கருவி தான் காரணமாக இருந்தது.
சாதனை: இது மனிதக் குலத்தின் மிகப் பெரிய மைல்கல் என்று BiVACOR நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். அதேநேரம் நோயாளி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தைரியம், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே இருக்கும் செயற்கை கருவிகளை விட இந்த BiVACOR கருவி பல நன்மைகளை வழங்குகிறது.
அதன் கச்சிதமான அளவு பெரும்பாலான நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இது டைட்டானியம் மூலம் செய்யப்பட்டுள்ளதால் எளிதாக அரித்துவிடாது. இப்போது இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், இந்த கருவி ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மாற்று இதயத்திற்காகக் காத்திருப்போருக்கு அவை கிடைக்கும் வரை இந்த கருவி பேருதவியாக இருக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications