ராகுல்காந்தியை ஏற்காத மக்கள் - லோக்சபாவில் காங்கிரஸ் கட்சி தோற்க இவைதான் காரணம்
மோடியை திருடன் என்று கிண்டலடித்தாலும் அவர் நாட்டின் பாதுகாவலர்தான் என்று மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் சக்தி வாய்ந்த தலைவராக மீண்டும் நிரூபித்திருக்கிறார் மோடி. ராகுல்காந்தியின் தோல
சென்னை: அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆளும் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. ஆனால் ஆளும்கட்சியான பாஜக மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைப்பது வரலாற்று சாதனைதான். அதே போல எதிர்கட்சியான காங்கிரஸ் படுபயங்கரமாக தோல்வியை தழுவுவதும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. மோடியை சக்தி வாய்ந்த தலைவராக ஏற்றுக்கொண்ட மக்கள் ராகுல்காந்தி சரியான போட்டியாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.
மோடியை கிண்டல் செய்யவும், அவர் மீது புழுதுவாரி தூற்றவும் காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருந்தனர். சௌகிதார் என்ற அடைமொழியை மோடி போட்ட மறுநொடியே அவரை திருடன் என்று பட்டம் கட்டி பிரச்சாரம் செய்தனர் ஆனால் அந்த பிரச்சாரம் எடுபடவில்லை.
மோடி மீது தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அப்படி இருந்து ரபேல் ஊழல் புகார் எழுப்பியும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மோடியின் தலைமை
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நரேந்திர மோடி சக்தி வாய்ந்த தலைவராக முன்நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் மட்டுமே முன் மொழிந்தார். பிற தலைவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. பிரதமர் யாரென்றே தெரியாத ஒரு குழப்ப கூட்டணிக்கு ஓட்டுப்போட மக்கள் தயாராக இல்லை.
வடக்கே ஆதரவு அதிகம்
வட இந்தியாவில் மோடி அசைக்க முடியாத தலைவராக இருக்கிறார். மக்களின் ஆதரவு பெண்களின் ஆதரவு மோடிக்கு அதிகம். ஆனால் ராகுல் காந்தி என்னதான் உடையை நடையை மேனரிஷசங்களை மாற்றினாலும் வட இந்தியாவில் எடுபடவில்லை. எங்கள் ஆதரவு மோடிக்குத்தான் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
சர்ஜிகல் ஸ்டிரைக்
அண்டை நாடுகளை எதிர்க்க, நாட்டை பாதுகாக்க மோடிதான் சரியான தலைவர் என்று மக்கள் நம்பினார்கள். நாட்டுக்கு தேவை சரியான பாதுகாவலன் என்று உணர்ந்துதான் சவுகிதார் என்ற அடைமொழியை மோடி சேர்த்தார். அதையும் கிண்டலடித்தார்கள். திருடன் பட்டம் கட்டினார்கள். சர்ஜிகல் ஸ்டிரைக், தீவிரவாத முகாம் ஒழிப்பு நடவடிக்கையில் மக்கள் ஆதரவு மோடிக்கு அதிகம் இருந்தது.
வல்லவனா? நல்லவனா?
மோடி போல அரசியல் சாணக்கியத்தனம் ராகுல்காந்திக்கு இல்லை என்றே கூற வேண்டும். வலிமையே இல்லாத உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், டெல்லியில் ஈகோ பார்க்காமல் கூட்டணி அமைத்திருந்தால் அந்த கட்சிகளின் தயவில் இன்னும் கொஞ்சம் சீட் வாங்கியிருக்கலாம்.
கை கொடுக்காத பிரச்சாரம்
பிரியங்காவை காங்கிரஸ் கட்சியை காக்க வந்த தேவதை என்பது போல அந்த கட்சியினர் பேசினர். ஒரு கட்டத்தில் பிரதமர் வேட்பாளர் என்றும் கூறினர். ஆனால் அவர் தேர்தல் நேரத்தில் மட்டும் தலையை காட்டி மோடி மீது புழுதிவாரி தூற்றியதை பலரும் ரசிக்கவில்லை. வட இந்தியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தேர்தலில் பிரியங்காவிற்கு வரவேற்பு இல்லாமல் போய்விட்டதுதான் சோகம்.
ஒற்றுமை இல்லை
மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டுமே எதிர்கட்சியினர் முன்வைத்தன. பாஜக அரசு கடந்த 5 ஆண்டு காலத்தில் செய்த மக்கள் நலத்திட்டங்களை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். எதிர்கட்சியினர் இடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லை என்பதே இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மை.
தூசு தட்டிய மோடி
ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுகள் எதுவும் பாஜக அரசு மீது சொல்ல முடியவில்லை. மோடி மீது தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாத நிலையில் ரபேல் ஊழலை முன்வைத்தனர். அதனை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மீண்டும் ஒரு வாய்ப்பு
10 வருடம் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஆண்டது. மோடி தலைமையிலான பாஜக அரசு 5 ஆண்டு காலம் ஆண்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றன. இன்னும் 5 ஆண்டுகாலம் கொடுத்தால் நாட்டினை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று நினைத்து மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். பிரதமர் பதவிக்கு எல்லாம் ராகுல்காந்தி சரிப்பட்டு வரமாட்டார் என்றே வட இந்தியர்கள் நினைத்து விட்டனர். தலைவராக ராகுல் இன்னும் வளரணும் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.