OTT Review: போலீஸ்காரர்களின் இதயத்தை பிடுங்கும் கொலைகாரன்! நடுங்க வைக்கும் அஞ்சாம் பாதிரா.. ரிவ்யூ
சென்னை: நாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒரு படத்தின் ரிவ்யூ பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் 2020 ஆம் ஆண்டு வெளியாகியான சைக்காலஜிக்கல் திரில்லர் படங்களில் ஒன்றான அஞ்சாம் பாதிரா என்ற மலையாள படத்தைப் பற்றி தான் இந்த வாரம் பார்க்க போகிறோம். இந்தப் படம் ஜி5 ஓடிடி தளத்தில் கிடைக்கிறது.

அஞ்சாம் பாதிரா ரிவ்யூ
"அஞ்சாம் பாதிரா" என்ற பெயரை கேட்டும் போது புரியாத புதிராக இருக்கலாம். ஆனால் இந்த படத்தின் கதை என்ன என்றால், வில்லன் போலீஸ்காரர்களின் இதயத்தையும், கண்ணையும் தோண்டி கொடூரமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ கில்லர். தான் கொலை செய்த இடத்தில் அவர் ஒரு வினோதமான பொருளையும் வைத்துவிட்டு போயிருக்கிறார். ஆனால் கடைசியில் எதற்காக வில்லன் கொலை செய்தான் என்பதுதான் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம்.
இந்தப் படம் வெளியாகிய காலத்திலேயே, தமிழில் வெளியான ராட்சசன் மற்றும் சைக்கோ போன்ற படங்களுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டது. 2018-ல் வெளியான 'ராட்சசன்' படம் சீரியல் கில்லர் கதைகளுக்கு ஒரு தனி மீட்டராக உருவாக்கியிருந்தது. அதன் தாக்கம் காரணமாக, அதன் பின்னர் வெளியாகும் பல சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படங்கள் அந்த தரத்துடன் ஒப்பிடப்பட்டன. அந்த வகையில், 'சைக்கோ' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், மலையாளத்தில் வெளியான 'அஞ்சாம் பாதிரா' சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அஞ்சாம் பாதிரா விமர்சனம்
இந்தப் படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியுள்ளார். கதையின் மையமாக, போலீஸ் விசாரணைக்கு உதவும் கிரிமினாலஜிஸ்ட் கதாபாத்திரத்தில் "குஞ்சாக்கோ போபன்" நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீநாத் பாசி, உன்னிமயா பிரசாத், ஜினு ஜோசப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் தனிச்சிறப்பாக, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை நகர்த்தப்பட்டுள்ளது.
'அஞ்சாம் பாதிரா' என்ற தலைப்புக்கே 'ஐந்தாவது நள்ளிரவு' என்ற அர்த்தம் உள்ளது. கதையின் தொடக்கத்தில், கொச்சியில் ஒரு போலீஸ் அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடைக்கிறார். அவரது உடலருகில் கண்கள் கட்டப்படாத நீதி தேவதை சிலை வைக்கப்பட்டிருப்பது விசாரணையை மேலும் சிக்கலாக்குகிறது.
இந்த வழக்கை விசாரிக்கும் குழுவுடன் இணைந்திருக்கும் கிரிமினாலஜி நிபுணர், இது சாதாரண கொலை அல்ல; ஒருவிதமான சைக்கோ மனநிலையுள்ள ஒருவரால் செய்யப்பட்ட தொடர் கொலைகளின் தொடக்கம் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதே பாணியில் இன்னொரு போலீஸ்காரர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.
மலையாள படத்தின் கதை
இதனால், இந்த கொலைகள் ஒரே நபரால் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பது தெளிவாகிறது. ஏன் போலீஸ் அதிகாரிகளே குறியாக்கப்படுகின்றனர்? இந்த கொலைகளின் பின்னணி என்ன? குற்றவாளி யார்? என்பதுதான் கதையின் மையமாக மாறுகிறது.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படங்களுக்கான பொதுவான அம்சங்கள்-திடீர் திருப்பங்கள், பதற்றமான சூழல், எதிர்பாராத கொலைகள்-எல்லாமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றை சாதாரணமாக அல்லாமல், பார்வையாளரை ஈர்க்கும் வகையில் அமைத்திருக்கிறதே படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கொலை காட்சிகள், பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் ஆகியவை திகிலை ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
படத்தில் மைனஸ்
முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக நகரும் இந்தப் படம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் மெதுவாகச் செல்லும் உணர்வை தருகிறது. இருந்தாலும், கதை வெளிப்படும் விதம் மற்றும் கிளைமாக்ஸில் கிடைக்கும் விளக்கம், பார்வையாளர்களுக்கு ஒரு அளவிற்கு திருப்தி அளிக்கிறது.
யார் கொலைகாரன்
தமிழ் படமான 'சைக்கோ'வில் "யார் கொலை செய்தார்?" என்பதைக் காட்டிலும் "ஏன் செய்தார்?" என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் 'அஞ்சாம் பாதிரா'வில், "யார்?" மற்றும் "ஏன்?" என்ற இரு கேள்விகளும் சமமாக வருகிறது, அதற்கான பதில்கள் கதை முடிவில் விளக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், உலக சினிமாவை அதிகமாகக் கண்டவர்களுக்கு இது ஒரு 'சாதாரணம் மேல்' படமாக தோன்றலாம். ஆனால், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்ற வகையை கைவிடாமல், அதற்கான அம்சங்களை சரியாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு விறுவிறுப்பான படமாக அஞ்சாம் பாதிரா பார்க்கப்படுகிறது.

கதையின மையம்
இந்தப் படம் உண்மையில் ஒரு "சைக்கோ" படமா? இல்லையா? என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக புரியலாம். இந்த படத்தில் சைக்கோ கில்லர் கொலைகாரன் மீது ஆரம்பத்தில் நமக்கு ஒரு விதமான விருப்பம் பயமும் ஏற்படும் கடைசியில் அவர் எதற்காக அந்த போலீஸ்காரர்களை கொலை செய்தார் என்று தெரியும்போது இந்த படத்தின் ஹீரோவிற்கு மட்டுமல்ல பார்க்கும் நமக்கும் வில்லன் செய்தது சரிதானோ என்று ஒரு நிமிடம் நினைக்கத் தோன்றிவிடுகிறது.
படத்தின் நிறை குறை
மொத்தத்தில் பார்க்கும்போது இந்த படத்தில் சில இடங்களில் லாஜித் மிஸ்டேக் இருக்கிறது. ஆனால் பரபரப்பு எந்த இடத்திலும் குறையவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகள் வருகிறது. அதிலும் ஹீரோ வில்லனை கண்டுபிடிக்க முடியாமல் வேலையில் இருந்து ரிலீவ் ஆகிற சமயம்தான் படத்தின் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அதற்கு பிறகு மற்ற இடங்களில் எல்லாம் எதிர்பார்க்காத பல ட்விஸ்டுகள் இருந்தது. அதனால் திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்கள் இந்த வாரம் நம்பி இந்த படத்தை பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications