OTT: மர்ம காட்டுக்குள் சிக்கிய 3 போலீஸ்காரர்களின் நிலை.. பதற வைக்கும் "சம்பவம் அத்தியாயம் ஒன்று” ரிவ்யூ இதோ
சென்னை: மலையாள திரையுலகில் சமீப காலமாக புதிய கதைக்களங்களை முயற்சி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், இயக்குநர் ஜிது சதீசன் மங்களத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள (Sambhavam adhayayam onnu Review) "சம்பவம் அத்தியாயம் ஒன்று" திரைப்படம், டைம் லூப், மர்மம், ஹாரர் மற்றும் உள்ளூர் கதைகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சியாக கவனம் பெற்றுள்ளது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழில் டப்பிங் உடன் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

சம்பவம் அத்தியாயம் ஒன்று கதை
இந்த திரைப்படம் கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ள அடர்ந்த காட்டை மையமாகக் கொண்டு நகர்கிறது. அந்தக் காட்டுக்குள் சென்றவர்கள் திரும்பி வருவதில்லை என்ற பழமையான மர்ம நம்பிக்கையை பின்னணியாகக் கொண்டு கதை தொடங்குகிறது. காணாமல் போன ஒரு போலீஸ் அதிகாரியை தேடும் பணியில் ஈடுபடும் குழுவினர் அந்தக் காட்டுக்குள் செல்லும் போது, அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களே கதையின் மையமாக அமைகிறது.
படத்தின் ஆரம்பம்
படத்தின் ஆரம்பக் காட்சி பழைய காலத்தைச் சேர்ந்த ஒரு மர்ம சம்பவத்தை காட்டுவதன் மூலம் ஒரு பதற்றமான சூழலை உருவாக்குகிறது. அதன் பின்னர், தற்போதைய காலக்கட்டத்தில் புதியதாக வேலைக்கு வரும் போலீஸ் அதிகாரி ஆனந்த் (Askar Ali) வழியாக கதை நகர்கிறது. டிரான்ஸ்பர் ஆகி அந்த எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்ட அவர், தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களுடன் இருக்கும் நிலையில் இந்த விசாரணையில் ஈடுபடுகிறார்.
விசாரணை முன்னேறிக் கொண்டிருக்கும்போது, காட்டுக்குள் நிகழும் விசித்திர சம்பவங்கள் கதைத் தளத்தை மெல்ல மெல்ல மாற்றுகின்றன. காலச்சுழற்சி, ஒரே நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுதல், கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் ஒன்றோடொன்று கலப்பது போன்ற அம்சங்கள் கதையில் இடம் பெறுகின்றன. உதாரணத்துக்கு சொல்லனும்னா மாநாடு படத்தில் "வந்தான் சுட்டான் ரிப்பீட்" என்று சொல்வது போல தான் இந்த காட்டுக்குள் பல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

படத்தின் மையக்கதை
மேலும், காகத்தை மையமாகக் கொண்ட ஒரு உள்ளூர் தெய்வ நம்பிக்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மர்மங்களும் கதைக்குள் இணைக்கப்பட்டுள்ளன. படத்தின் முக்கிய பலமாக அதன் கரு அமைந்துள்ளது. மலையாள சினிமாவில் அரிதாக கையாளப்படும் டைம் லூப் போன்ற கருத்தை எடுத்துக்கொண்டு அதை உள்ளூர் பின்னணியுடன் இணைக்க முயன்றிருப்பது பாராட்டத்தக்கது.
குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் திருப்பம் அனைவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், திரைக்கதை அளவில் படம் சில இடங்களில் பலவீனமாகிறது. டைம் லூப் சார்ந்த கதைகளுக்கு தேவையான துல்லியமான கட்டமைப்பு முழுமையாக இல்லை என்பதால் சில லாஜிக் கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் கதை முன்னேறும் வேகம் குறைவதாக உணரப்படுகிறது. மேலும், கதாபாத்திரங்களின் எமோஷனல் முழுமையாக வெளிப்படாததால், கதையின் தாக்கம் குறைகிறது.
அதுவாவது ஹீரோ தன்னுடைய அப்பாவை அந்த காட்டுக்குள் பார்க்கிறார். அவரிடம் நான் தான் உங்க பையன் என்ற ப்ரூஃப் காட்டுகிறார் ஆனால் ஹீரோவின் அப்பா தன்னுடைய மகனைப் பார்த்து எந்த ஒரு ரியாக்ஷனும் பெரிதாக காட்டவில்லை. அது கதைக்கு ஒட்டாதது போல இருக்கிறது. நடிப்பில், அசார் அலி தனது கதாபாத்திரத்தை இயல்பாக எடுத்துச் செல்கிறார். வினித் குமார மற்றும் சித்தார்த் ஆகியோர் தங்களுக்கான இடத்தில் ஸ்ட்ராங்கான நடிப்பை காட்டுகிறார்கள்.

சம்பவம் அத்தியாயம் ஒன்று ஓடிடி
எனினும், படத்திற்கு மேலும் தாக்கத்தை அளிக்கும் அளவிற்கு எந்தக் கதாபாத்திரமும் முழுமையாக உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு படத்தின் சூழலை வலுப்படுத்துகின்றன. அடர்ந்த காட்டு காட்சிகள் மற்றும் பின்னணி ஒலிகள் இணைந்து ஒரு பதற்றமான உணர்வை உருவாக்குகின்றன. எடிட்டிங் சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், மொத்தத்தில் கதை நகர்வை தக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில், "சம்பவம் அத்தியாயம் ஒன்று" ஒரு வித்தியாசமான கருவை கொண்ட முயற்சியாகத் திகழ்கிறது. புதிய வகை கதைகளை விரும்பும் பார்வையாளர்களுக்கு இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கலாம். ஆனால், திரைக்கதை மற்றும் எமோஷனல் குறைவானதால், இது முழுமையான திருப்தியை அளிக்காத படமாகவே தெரிகிறது.
இந்த படம் பார்க்கத் தகுந்த முயற்சியாக இருந்தாலும், அதனை மேலும் வலுவாக உருவாக்கியிருக்கலாம் என்ற எண்ணத்தை பார்வையாளர்களிடம் விடுகிறது.














Click it and Unblock the Notifications