உலகளாவிய கவனம் பெற்ற தமிழ் எழுத்தாளர்.. ஜோசன் ரஞ்சித் எழுதிய 'மெராக்கி' நூலை வெளியிட்ட கோவா முதல்வர்
சென்னை: கோவா நட்சத்திர விடுதியில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில், திருச்சி மாவட்டம் நவலூர் குட்டபட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய "மெராக்கி" என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது. கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் இந்த நூலை வெளியிட்டார்.
இந்த விழாவில், மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் மற்றும் நடிகை ஹேமா மாலினி சிறப்புரையாற்றினர். அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, தொழில்நுட்பம், மனநலம், மற்றும் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். விழாவிற்கான அமைப்பு, அதன் அழகியல் மற்றும் அறிவியல் கலவையுடன் கூடிய ஆடம்பரம், இலக்கியத்தை ஒரு கொண்டாட்டமாக மாற்றியது.

"மெராக்கி" என்பது ஜோசன் ரஞ்சித்தின் ஐந்தாவது ஆங்கில மொழி நூல் என்பது மட்டுமல்ல, இலக்கிய உலகில் புதிய கோணங்களை ஆராயும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நூலில் அவர், மனித மனதின் ஆழங்களை எளிமையாக ஆனால் தாக்கம் செய்யும் எழுத்துக்களால் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.
புத்தகம் குறித்து இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் கூறுகையில், "இந்த நூல் வாசகர்களை வெறும் வாசகர்களாக இருக்காமல் எழுத்தாளர்களாக மாறச் செய்யும். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி என வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் ஒரு சமநிலையில் ஏற்று, மன அமைதியுடன் வாழ வழிகாட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. எதார்த்தமான, எளிமையான சொற்களால் இது அனைவரையும் தொடும்" என்றார்.
"மெராக்கி" என்ற சொல், கிரேக்கத்தில் இருந்து வந்தது. 'மனது மற்றும் ஆன்மாவை முழுமையாக ஒரு செயலில் செலுத்துவது' என்ற அர்த்தம் கொண்டது. இந்த தலைப்பே, புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் எழுத்தாளரின் அகவுலக அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது.

இந்நூல் தற்போது 120 உலக நாடுகளில் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான், கூகுள் புக்ஸ், ஆப்பிள் ஸ்டோர் போன்ற முன்னணி இணைய தளங்களில் ஏற்கனவே நூலுக்கு கிடைக்கும் வரவேற்பு, இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய அதிகாரத்தைத் தொடக்கி வைத்திருக்கிறது.
புதுமை, பற்று, பரந்த பார்வை, மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை கோர்த்து ஒரு அழகான இலக்கிய வடிவமாக மாற்றியுள்ளார் ஜோசன். தமிழ் பாரம்பரியம் கொண்ட இளம் எழுத்தாளர் ஆங்கில இலக்கியத்தில் இந்தளவுக்குப் பெயர் வாங்கும் விதமாக செயல்படுவது, இளம் தலைமுறையினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications