கொரோனா கட்டுப்பாடுகளுடன் 12-ம் வகுப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும் - தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் 12-ம் வகுப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்திஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும் சமீப காலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

12th Classes will continue in Tamilnadu

இதனைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் கடந்த 16.3.2021 மற்றும் 17.3.2021 ஆகிய நாட்களில் சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை போன்ற பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்களோடு விரிவாக ஆய்வு நடத்தி உரிய தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்தவும் அறிவுரைகள் வழங்கியதை அடுத்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பரிசோதனைகளை அதிகப்படுத்த ஆணையிட்டதன் விளைவாக ஏற்கனவே உள்ள நாளொன்றுக்கு 50,000 என்ற அளவில் இருந்து தற்பொழுது நாளொன்றுக்கு 75,000 என்று சோதனைகள் பரவலாகவும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது இதன் விளைவாக நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக நோய்த் தொற்றின் எண்ணிக்கை வரும் நாட்களில் சற்று அதிகமானாலும் நோய்த் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படும் காரணத்தினால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க இதுவே மிகச் சிறந்தவழி என்று பொதுச்சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதைத்தவிர நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நோய் பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புக்கள் அடையாளம் காணப்பட்டு மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பொது சுகாதார விதிகள் மற்றும் கோவிட் சார்ந்த பழக்கங்களான பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, கைகழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மீது மற்றும் கடந்த மூன்று நாட்களில் 24,700 நபர்கள் / நிறுவனங்களுக்கு ரூ.52.64 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை சுமார் 20 இலட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பு ஊசி அளிக்கப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகப்படுத்த, 3217 இடங்களில் தடுப்பு ஊசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் 28.12.2020 அன்று நடந்த கூட்டத்தில் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும், பெற்றோர்கள் / பள்ளிகளின் கருத்துக்களைப் பெற்று, முதல்கட்டமாக 19.1.2021-ஆம் நாள் முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளைத் திறக்கவும், 8.2.2021 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளைத் திறக்கவும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் அவர்கள் பரிசோதனையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பள்ளிகளில் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் சில மாவட்டங்களில் சிறிய அளவில் இந்த தொற்று பள்ளிகளில் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் ஒட்டுமொத்த நாள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டாலும் தற்போது கோவிட் தொற்று பரவும் சூழ்நிலையில் இந்த பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கோவிட் கூட்டுத் தொற்றால் அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பரவி பன்மடங்கு அந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் அந்த மாவட்டத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை உடனடியாக தடுக்க, 9-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்புவரையிலான வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாலும், அவர்கள் பொதுத் தேர்வை எழுத வேண்டி உள்ளதாலும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 12-ஆம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்றும், இவர்களுக்கான விடுதிகளையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும், கோவிட் தொற்றால் மாணவர்களும் அதனால் பொதுமக்களும் பாதிக்கக்கூடாது என்பதாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி வரும் 22.3.2021 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு இணையவழி / டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும்.

இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. கோவிட் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் மற்றும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும் என்றும், அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், சுகாதாரப் பணியாளர்கள், இதர முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வயது வரம்பின்றியும் அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமiயை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இதனை கடைபிடித்து, கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்களை அரசு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு ராஜீவ் ரஞ்சன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+