லோக்சபா தேர்தலில் சாத்தியமாகும் மாற்றம்.. பல்ஸ் பிடித்த பழனிசாமி! அனல் பறக்கும் பிரசாரம்!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவுக்கு வாக்கு கேட்டு எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. எனவே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமான பரப்புரையை தொடங்கியுள்ளன. அதிமுகவை பொறுத்த அளவில், வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய 18 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது.

காங்கிரஸுடன் மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளிலும், 8 தொகுதிகளில் திமுகவின் இதர கூட்டணிக் கட்சிகளுடனும் மோதுகிறது.
எனவே அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார். அவரது பரப்புரை குறித்து கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி சூடு பிடித்து வருகின்ற நிலையில் அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் தமிழ்நாடு எங்கும் அனல் பறக்கும் விதத்தில் அமைந்துள்ளன.குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் மக்கள் இடையே பெரிய வரவேற்பும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.
செய்தித்தாள்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் என தங்களது விளம்பர பிரச்சாரங்களை அதிமுக ஒரு புறம் முடுக்கிவிட்டு இருந்தாலும் இந்த தேர்தலில் அதிமுக கதாநாயகராக திகழ்வது எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பொதுக்கூட்ட உரைகள் தான்.
அதிமுகவில் கிளைச் செயலாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பல்வேறு நிலைகளில் கள அரசியலிலே ஏறத்தாழ 50 ஆண்டுகள் பயணித்த காரணத்தினால் தமிழ்நாட்டின் அரசியல் களம் எப்படி இருக்கும் என்பதையும் மக்களுடைய பல்ஸ் எப்படி இருக்கும் என்பதையும் நன்றாக உணர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுகளும் அவர் கையாளும் யுக்திகளும் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக களத்தில் எந்த விஷயங்களை பேசினால் தாக்கம் ஏற்படுத்தும் என்ற சிறந்த புரிதலோடு தன்னுடைய வாதங்களை பிரச்சார பொதுக் கூட்டங்களில் முன்வைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.
ஒவ்வொரு தொகுதியை பற்றி பேசும்பொழுதும் அந்தத் தொகுதியின் திட்டம், அந்த தொகுதிக்கு அதிமுக அரசு வழங்கிய திட்டங்கள் குறித்தும் மேலும் அந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதற்கு அதிமுக வைத்துள்ள தீர்வுகள் குறித்தும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரச்சார கூட்டங்களை பேசி வருவது அந்தந்த தொகுதி மக்களிடையே ஒரு கனெக்ட் ஏற்படுத்துகிறது.
போதைப் பொருள் விவகாரம், நீட், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது பிரச்சனை, பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசுக்கு எதிர்ப்பு, குடும்ப அரசியல் என அவர் கையில் எடுக்கும் விவகாரங்கள் அனைத்துமே களத்தில் மக்கள் இடையே எடுபடுகின்றன.
எடப்பாடியின் பிரச்சாரம் அதிமுகவினருக்கு ஒரு பூஸ்டாக அமைகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார வாதங்களை கட்சித் தொண்டர்கள் தெருத் தெருவாக சென்று வீடு வீடாக சென்று முன் வைக்கும் பொழுது அது களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என அதிமுக தொண்டர்கள் நம்புகின்றனர். இது தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வாக்குகளை கொடுக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications