ஆதியோகி முன் ராம நாமம்!.. ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளால் ஜொலித்த "ஜெய் ஸ்ரீ ராம்"
கோவை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவையில் ஆதியோகிக்கு முன்பு "ஜெய் ஸ்ரீ ராம்" மந்திரம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது.
அயோத்தியில் பால ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் பல ஊர்களில் நேரலையில் அமர்ந்து பால ராமரை தரிசனம் செய்தனர்.

பிராணப் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராம ஜோதியை ஏற்றிக் குழந்தை ராமரை வரவேற்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், "குழந்தை ராமர் இன்று அயோத்தி தாமில் உள்ள தமது பிரமாண்டமான ஆலயத்தில் அமர்ந்துள்ளார். இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், ராம ஜோதியை ஏற்றி, தங்கள் வீடுகளிலும் அவரை வரவேற்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம்!" என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

நாடு முழுவதும் ராமரை வணங்கும் மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டனர். கோவையில் ஆதியோகி முன்பு அகல் விளக்குகளால் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இந்த வரலாற்று வைபவத்தை கொண்டாடும் வகையில் கோவை ஆதியோகிக்கு முன்பு "ஜெய் ஸ்ரீ ராம்" மந்திரம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. ஆதியோகியின் அற்புத இருப்பின் முன் ஜெய் ஸ்ரீ ராம் - அகல் விளக்கு அலங்காரத்தின் டிரோன் காட்சிகள் கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications